மை டியர் ஜெங்கிஷ்
”டீச்சர் ... டீச்சர் .... “
யாரோ அம்மாவை அழைக்கும் குரல்....
வேலையில் அம்மா மும்முரமாக இருந்ததால் ....
“கலையப்பா யாரோ கூப்டுறாங்க... கொஞ்சம் என்னனு போய் பாருங்க....”
அப்பா நிதானமாக கேட் அருகில் செல்ல....
எதிர்வீட்டில் குடியிருக்கும் பெண்மணி வாசலில் நின்றிருந்தார்... கையில் கோல்டன் ப்ரௌன் நாய்க்குட்டி ....
”சார்! நாங்க வேர்கடலை வாங்கப் போகிற இடத்தில, இந்த நாய்க்குட்டி கிடச்சுது.... பாக்க நல்ல ஜாதி நாய் மாதிரி தெரியுது.... உங்க வீட்டுக்கு நாய் தேவைப்படும் வச்சிக்கோங்க...”(இப்படித்தான் ஜெங்கிஷ் எங்கள் வீட்டிற்குள் வந்தது)
நாயை பார்த்தவுடன் அண்ணனுக்கு கொள்ளை ஆசை..... அப்பா யோசிப்பதற்குள் அள்ளி அணைத்து வீட்டிற்குள் ஓடிவந்தான்.....
முதல் நாள் அது வீடு முழுவதும் ஓடி அடித்த லூட்டி தாங்க முடியவில்லை.... எல்லோருக்கும் பிடித்த செல்லக் குட்டியாகிவிட்டது.... தடபுடலாக பெயர் தேர்ந்தெடுக்கும் படலம்.... நான் எனக்குப் பிடித்த வெஸட் இன்டீஸ் விக்கட் கீப்பர் டூஜார்ன் பெயரை வைக்கச் சொன்னேன் .... அண்ணனுக்கு மங்கோலிய மாவீரன் ஜெங்கிஷ்கான் பெயரை சூட்ட வேண்டும் என்று ஆசை.... கடைசியாய் ஜெங்கிஷ் என்று ஒருமனதாக பெயர் சூட்டப்பட்டது......
எல்லோரும் அதை ஜெங்கிஷ் என்று கூப்பிட்டவுடன் அது துள்ளி ஓடிவருவதை பார்ப்பதில் அத்தனை ஆனந்தம்.... அதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் .... தின்பதில் அதற்கு போதும் என்ற அளவே எட்டாது.... போட போட சாப்பிடும்... எதை கொடுத்தாலும் சாப்பிடும்.... வந்த இரண்டாவது நாளே இரண்டு கேழ்வரகு அடை ஆறு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு , பெரிய ஒரு கிண்ணம் நிறைய பாலும் குடித்து, நடக்க முடியாத அளவிற்கு அதன் வயிறு கீழே தரைத்தட்ட.... அதுவோ இன்னும் ஏதாவது போடுவார்களா என்று எங்கள் வாயையே மாற்றி மாற்றி பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தது......பீமன் என்று பெயர் வைத்திருந்தால் அதற்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்.....
வீட்டில் அத்தனைபேர் செருப்பையும் கடித்துக் குதறித் தள்ளியது... வீட்டிற்கு வந்த ஒரு வாரத்தில் எங்கள் செல்ல ஜெங்கிஷைக் காணவில்லை.... வீடு முழுக்கத் தேடினோம்.... கேட் வழியாக புகுந்து வெளியே ஓடியிருக்குமோ என்று விசாரித்தோம்.... மாடியிலும் சென்று பார்த்தோம் கிடைக்கவில்லை.... மாலையில் அம்மா காய வைத்தத் துணிகளை எடுத்தபோதுதான் கண்டுபிடித்தார்கள்.... அம்மாவின் சேலைக்குள் சிக்கி... நன்றாக பொட்டலம் போல உருண்டு வெளியே வர இயலாமல் உள்ளேயே உறங்கிக் கிடந்தது.....
விடுபட்டவுடன் எங்களை பார்த்த மகிழ்ச்சியில் வீடு முழுவதும் அது துள்ளி துள்ளி ஓடி.... ஒவ்வொருவரையும் பார்த்து வாலாட்டி குதித்தக் காட்சி...இன்றும் என் கண்முன்னால் நிற்கிறது.....
அதை குளிப்பாட்டுவது..... அதன் கழிவுகளை அப்புறப் படுத்துவது அதற்காக படிக்கட்டுக்கு அடியில் இருந்த கூட்டை சுத்தம் செய்வது , என்ற அத்தனை பராமரிப்புப் பணிகளையும் செய்வது அண்ணன் கலைவாணன் தான் ... அது உடல்நலக் குறைவால் லேசாக சோர்ந்துவிட்டால் .... பக்கத்தில் இருந்து பரிவாய் கவனிப்பதும் அவன் தான் .... வெளிசென்று வீட்டுக்குள் நுழையும்போதே , அவன் முதல் கேட்கும் கேள்வி “ஜெங்கிஷ்கு சாப்பாடு வச்சாச்சா...?”
அதனால்தானோ என்னவோ.... அது அண்ணன் கட்டளைக்கு உடன் அடிபணியும்.... நான் எவ்வளவு சொன்னாலும் சட்டையே பண்ணுவதில்லை... அதை அதிகம் கொஞ்சுவது நான் தான்.... வீட்டில் தனிமையில் இருக்கும்போது பெரிய துணை ஜெங்கிஷ் தான்.... என்னோடு தரையில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மிகவும் ஆர்வமாய் பார்க்கும்... நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வத்தில் இருக்கும்போது... அப்படியே என்மீது சொகுசாக சாய்ந்துக் கொள்ளும்... அதன் கனம் தாங்காமல் நான் விரட்டினால்.... ஏதோ தள்ளுவதுபோல உடலை லேசாய் அசைத்து மீண்டும் சுகமாய் சாய்ந்து கொள்ளும்.... என் அண்ணன் அடிக்கடி கடிந்து கொள்வான் ....
“அம்மா! இவ நாய்க்கு செல்லம் கொடுத்து கெடுக்றா.... நல்லா தீனிமாடு மாதிரி ஆயிடுச்சு” என்று கத்துவான்....
அதன் தோற்றத்தைக் கண்டு அஞ்சாதவர் எவரும் இருக்க முடியாது.... யாரையும் பார்த்து அதிகம் குரைத்ததில்லை.... அருகில் சென்று இரண்டு முன்னங்கால்களையும் அவர்கள் தோள் மேல் வைக்கும் .....வந்தவர்கள் குலைநடுங்கி விடுவார்கள் .... என் கல்லூரி தோழிகள் ஒருமுறை வாசல்வரை வந்து... உள்ளே வரமாலே திரும்பிவிட்டனர்...
“இவா ஆத்துல நாய்க்கு பதிலா சிங்கம் வளக்றாடி, இவா ஆத்துப் பக்கம் எவளும் போய்டாதிங்கோ” என்று தோழி பானுமதி சொன்னது இன்றும் நினைவிருக்கிறது....
நான் எவ்வளவு அதட்டி, வெளியே சென்று படுக்கச் சொன்னாலும்... என்னை ஒரு இராஜபார்வை பார்த்துவிட்டு, அழகாய் நடுக்கூடத்தில் தான் படுக்கும்.....
பலமுறை அதை நம்பி என்னை தனியாக வீட்டில் விட்டுச் சென்றிருக்கிறார்கள் என் பெற்றோர்கள் .... அந்த நம்பிக்கையை அது காப்பாற்றத் தவறியதே இல்லை.... பொதுவாக தண்ணீரை பார்த்தால் ஓடி ஒழியும்.... ஏதும் பெரிய சத்தம் கேட்டால், ஓடி வந்து சோஃபாவிற்கு அடியில் பதுங்கிக் கொள்ளும்....
ஒருமுறை பலத்தக் காற்று இடி மின்னலுடன் மழை.... வீட்டில் நான் மட்டும்.... ஒரு திருமண விழாவிற்கு சென்ற வீட்டார் அனைவரும் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.... மிகவும் பயந்துபோனேன்.... ஜெங்கிஷ் இடி சத்தம் கேட்டு பயப்படுமே என்று நினைத்த நான்... கதவை திறந்து அதை உள்ளே வரும்படி அழைத்தேன்.... என்னே ஒரு ஆச்சரியம் .... அது உள்ளே வரவே இல்லை.... காற்று சுழன்று சுழன்று அடித்து வாசலில் இருந்த முருங்கை மரம் உடைந்து வீழ்ந்தது..... பயங்கராமாய் இடி.... மழையோ கொட்டித் தீர்க்கிறது..... எங்கள் மாவீரன் ஜெங்கிஷின் தைரியத்தையும், விசுவாசத்தையும்... அன்று கண்கூடாகக் கண்டேன்.... வீட்டின் ஹால் கதவிற்கும் மெயின் கேட்டுக்கும் இடையே.... ஏதோ எல்லை காக்கும் சிப்பாய் போல மிடுக்காய், வீட்டிற்கு அனைவரும் வரும்வரை.....குறுக்கும் நெடுக்குமாக ஓடிக் கொண்டிருந்தது..... உண்மையில் நான் நெகிழ்ந்து போனேன்...... என் செல்ல ஜெங்கிஷ் வெறும் pet dog அல்ல.... A great watch dog என்பதை அன்றுதான் உணர்ந்தேன்.... எட்டு வருடங்கள் எங்களோடு வாழ்ந்தது... பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது.... அண்ணன் துடித்துப்போனான்.... அதன்பிறகு நான் தனிமையில் இருக்கும்போது... அது உள்ளே ஓடிவருவது போலவே பிரம்மை ஏற்படும்.... என் கண்கள் தானாய் குளமாகிவிடும்.
மறைந்து முப்பது வருடங்களுக்கு மேலாகியும்... என் நினைவில் நீங்காது வாழ்ந்துக் கொண்டிருக்கிறது.