சிவயோக வாழ்வியல் நூல் - திருமந்திரம் -1

மெய்ஞ்ஞானம்

மெய் என்ற சொல்லுக்கு உண்மை மற்றும் உடல் என்று இரண்டு பொருள் உண்டு .மெய்ஞ்ஞானம் என்றால் உண்மையான ஞானம் என்று பொருள் கொள்ளலாம் .பருவுடலை குறித்த ஞானம் என்றும் பொருள் கொள்ளலாம் .ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் நமது உடல் குறித்த முழு அறிவே 'மெய்ஞானம் " என்ற உண்மை விளங்கும் . தனது சிவயோக நெறியால் தான் பெற்ற மெய்ஞானத்தையே திருமூலர் நமக்கு திருமந்திர நூலாக அருளிச் சென்றிருக்கிறார் . மெய் என்னும் உடம்பு நிலையற்றது என்றே அனைத்து மதங்களும் அறிவுறுத்துகின்றன .பரம்பொருளைக் காண இந்த உடம்பே ஒரு தடையாக இருப்பதாகவே வலியுறுத்தப்பட்டது .மெய் என்பதுவே பொய் என்றே பல சித்தர்களும் பாடினர்.

" காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா "

என்ற சித்தர்பாடல் வரிகளை இங்கு நினைவில் கொள்ளவேண்டும் .

"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே '

திருமந்திரம் பாடல் எண் 321

பொருள் :

தனக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளை சமைத்து உண்டு மனைவியோடு சற்று நேரம் இன்பமாக பொழுத்தை கழித்திட்டார் . படுக்கைக்கு செல்லுகையில் இடப்புறமாக வலிக்கிறதே என்றார் . கிடந்தவர் மீண்டும் எழவில்லை , இறந்துபோனார் .

உடலின் நிலையாமை , மரணம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற கருத்தை இப்பாடல் விளக்குகிறது . படுக்க செல்லும் பொது இடப்புறமாக வலிக்கிறது என்றார் . தீடீர் இறப்புகள் பெரும்பாலும் மாரடைப்பு காரணமாகவே நிகழ்கின்றது . இடதுபுறமாக நெஞ்சுவலி தோன்றினால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம் , கவனம் தேவை என்ற நவீன மருத்துவ எச்சரிக்கையை அக்காலத்திலேயே தனது பாடலில் திருமூலர் எடுத்து சொல்கின்றார் என்றால் திருமூலர் ஞானி தானே . இதயம் எங்கே இருக்கிறது , அதன் இயக்கங்கள் என்ன . அதில் ஏற்படும் நோய்கள் மரணத்தை விளைவிக்கும் என்பன போன்ற உண்மைகள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால்தான் நவீன மருத்துவம் கண்டுபிடித்தது .

ஆனால் சுமார் 1300 -1500 ஆடுகளுக்கு முன்னரே திருமூலர் "இடப்பக்கமே நொந்தது " என்றார் . ' கிடந்தொழிந்தார் " என போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் . சித்தர்களின் மெய்ஞானச் சிறப்பை இது உணர்த்துகிறது .

அடுத்தது 'இறை " என்ற சொல்லாடல் கூர்ந்து கவனிக்கத்தக்கது . இடப்பக்கமே " இதயம் நொந்ததே " என்றோ , இடப்பக்கமே "மார்பு " நொந்ததே என்று கூறியிருக்கலாம் . ஆனால் *இறை * நொந்ததே * என்கிறார் .ஏன் ?
*இறை * என்பது இறைவனைக் குறிக்கும் சொல். உடல் எனும் ஆலயத்தினுள் இறைவன் உறையும் இடமாக *அன்பு * ஊற்றெடுக்கும் கருவறையாக சித்தர்கள் இதயத்தை கருதினர் . எனவே தான் *இறை நொந்ததே * என்ற சொல்லாடலை பயன்படுத்தி இருக்கிறார் மெய்ஞானி திருமூலர் .

இன்னும் வரும் ..

நன்றி மருத்துவர் திரு ஜாண் பி நாயகம் அவர்கள் .

எழுதியவர் : வசிகரன் .க (28-Aug-20, 12:39 pm)
பார்வை : 156

மேலே