கற்சிலை தோற்கும் கலையோவியம் தோற்கும்

சிற்றிடை மெல்ல அசைந்திட செவ்விதழ்
பொற்குடமாய் முன்வந்தாள் பார் !

கற்ற தமிழினில் நற்கவிதை நானெழுத
நற்றமிழாள் முன்வந்தாள் பார் !

கற்சிலை தோற்கும் கலையோ வியம்தோற்கும்
பொற்கோ புரச்சிலையி வள் !

விற்புருவ வேல்விழிப் பூங்கணையால் விண்ணிலெய்வேன்
அற்புத ஏவுகணை நான் !

கற்றுத் தருவாள் இவள்கண்ணில் ஆயிரம்
வற்றாத நீலவிழி நைல் !

பெற்றவள் பெற்றிட்ட போதுவந்தாள் நானிவளைப்
பெற்றுவந் தேனுயர்ந் தேன் !

உற்றார் உறவுகள் வாழ்த்த மணமுடிப்பேன்
பெற்றான்பே றென்பார்ஊ ரார் !

-----றகர ஒற்று எதுகை அழகில் பயின்று வர அமைக்கப்பட்ட
யாப்பழகியல் குறட்பாக்கள் .

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-20, 10:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 70

மேலே