குமரேச சதகம் – இது சேரின் இது பயன்படாது - பாடல் 93
பன்னிரு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அழலுக்கு ளேவிட்ட நெய்யும் பெருக்கான
ஆற்றிற்க ரைத்தபுளியும்
அரிதான கமரிற் கவிழ்த்திட்ட பாலும்வரும்
அலகைகட் கிடுபூசையும்
சுழல்பெருங் காற்றினில் வெடித்தபஞ் சும்மணல்
சொரிநறும் பனிநீரும்நீள்
சொல்லரிய காட்டுக் கெரித்தநில வும்கடற்
சுழிக்குளே விடுகப்பலும்
விழலுக் கிறைத்திட்ட தண்ணீரும் முகம்மாய
வேசைக் களித்தபொருளும்
வீணருக் கேசெய்த நன்றியும் பலனில்லை
விருதாஇ தென்பர்கண்டாய்
மழலைப் பசுங்கிள்ளை முன்கைமலை மங்கைதரு
வண்ணக் குழந்தைமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 93
- குருபாத தாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
திருந்தாத மொழிகளையுடைய பச்சைக்கிளியை முன்கையில் வைத்துக் களிக்கும் பார்வதி பெற்ற அழகிய குழந்தையான முருகனே! மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!
நெருப்பில் வார்த்த நெய்யும், வெள்ளமான ஆற்றிலே கரைத்திட்ட புளியும், அருமையான நிலவெடிப்பிலே கவிழ்த்த பாலும், வருகின்ற பேய்களுக்குச் செய்யும் வழிபாடும்,
சுழன்று வீசும் பெரிய காற்றிலே வெடித்திருக்கும் பஞ்சும், மணலிலே வார்த்த மணமிக்க பனிநீரும், கூறுதற்கரிய பெரிய காட்டிலே பொழிந்த நிலவின் ஒளியும், கடலிற் சுழித்து நிற்கும் பகுதியிலே செலுத்தப்பட்ட கப்பலும்,
விழலுக்குப் பாய்ச்சிய குளிர்ந்த நீரும், முகப்பார்வையினால் மயக்கும் பரத்தைக்குக் கொடுத்த செல்வமும், பயனற்றவர்களுக்குச் செய்யும் நலமும் பயன் தராதவை; இவ்வகைச் செய்கை வீண் என்று கூறுவர்