ஓவியக் கவிதை அய்யனே

உன்னையும்
என்னையும் தழுவிய
வாடைக் காற்று
முதுமை நோக்குகின்றது .

நீயும் நானும்
குதித்த ஓடை நீரும்
இளமை இழக்கின்றது.

நாம் இருவரும் நட்ட
தோட்டத்து மல்லிகை
மலர்களும்
பள்ளியறை கேட்கின்றது.

உன் கரமும் என் கரமும்
தொட்டுப் பதியமிட்ட
பருத்திப் பஞ்சும் குடித்தனம்
நடத்த அழைக்கின்றது.

அன்னையின் தேர்வான
சுடிதார் விடுதலை கேட்கின்றது.
விருப்போடு நீ கொடுத்த
பட்டுச் சேலை கசங்கிடத் துடிக்கின்றது .

கூடி ஓடி நாம் விளையாடிய
தெருவெல்லாம்.
கெட்டி மேளம் கேட்கின்றது.

படியேறிடும் கால்கள் இரண்டும்
மெட்டியொலிக்குக்
கட்டளையிடுகின்றது.

மருதாணி விரல்கள்
மாற்று மோதிரத்தைக்
காத்து இருக்கின்றது.

ஏர் நெற்றி குங்குமத்
திலகத்திற்கு ஏங்குகின்றது.
வகுத்த உச்சியும் நெற்றிச்சுட்டி
போட்டுக்கத் துள்ளுகின்றது.

நீ பிடித்து இழுத்து
அடித்துப் பார்த்த கரங்கள்
வண்ண வளையல்கள்
போட்டுக்கச் சொல்லுகின்றது.

இத்தனையும் இங்கிட்டு
நடக்கின்றதே .
அங்கிட்டு நான் சாய்ந்த
தோள்கள்
இன்னும் மாலை மாற்றிக்கக் கேட்டுக்கவில்லையோ அய்யனே.

(ஓவியருக்கு வாழ்த்துகள்)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (22-Sep-20, 6:27 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 130

மேலே