மாவலி வாணா - நேரிசை வெண்பா
மாவலி வாணர் என்னும் வாணர் குலத்து அரசர்கள். ஒரு காலத்தில் தமிழ்நாட்டுச் சிற்றரசர்களாகச் சிறப்புற்று விளங்கினர், விசயநகர வேந்தர்கள் காலத்தில் இவர்களின் சிறப்பு, சில சமயங்களில் பாண்டியரைக் காட்டினும் கூடியிருந்ததும் உண்டு. அப்பொழுது, இவர்களுள் ஒருவன், தன்னைப் பற்றிச் செருக்குடையோனாகத் திகழக் காளமேகத்தின் நெஞ்சத்தில் வேதனை பெருகுகின்றது.
புகழ்பெற்ற பாண்டிய அரசை அழித்துப் 'பாண்டிய குலாந்தகன் என்ற விருதையும் சூடிக் கொண்ட வாணனை அவர் வெறுப்புடனேயே கருதுகின்றார். அவனை இகழ்ந்து சொல்லிய செய்யுள் இது.
நேரிசை வெண்பா
(‘ய்’ ஆசிடையிட்ட எதுகை)
சொக்கன் மதுரையில் தொண்டர்க்கு முன்னவிழ்த்த
பொய்க்குதிரை சண்டைக்குப் போமதோ - மிக்க
கரசரணா வந்தக் கரும்புறத்தார்க் கெல்லாம்
அரசரணா மாவலிவா ணா! 211
- கவி காளமேகம்
பொருளுரை:
இப்பாடலிற் குறிப்பிடப்படும் வாணன் 'திருமாலிருஞ்சோலை நின்றான் மாவலி வாணாதிராயன்' என்பர்.
மாவலி வாணனே! சொக்கேசப் பெருமான், அந்நாளிலே தம் தொண்டரான வாதவூரடிகளின் பொருட்டாக, மதுரை நகரிற் கொண்டு விட்ட பொய்க்குதிரைகள், போர்க்களத்திற்குப் போகக் கூடியவையோ? அவை போகாவன்றே!
அது போலவே, பருத்த காலுங் கையுங் கொண்டு உருவால், பெரிதாக விளங்குபவனே! விலங்குகளைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்று திரியும் இழிதொழிலாளர்க்கு அரசனே! நீதான் இந்நாட்டு மக்களைக் காத்துப் பேணுதற்கு ஏற்ற அரசாகிய அரணாவாயோ? 'நீ ஆக மாட்டாய்' என்பது கருத்து.