விமர்சனங்கள்
கனியிருப்பக்
காய் கவர்ந்தற்று
வள்ளுவன் வாக்கு
வாக்கினிலே இனிமை
பாரதி கூற்று.
எத்தனைபேர்
எடுத்துச் சொன்னாலும்
வார்த்தைகள் சிலருக்கு
விஷ அம்புகளாய்....
விமர்சனம் கண்டு
வேதனை வேண்டாம் அது நீ
வளர்கிறாய் என
உணரும் தருணம் .
நல்ல விமர்சனம்
உன்னை நீயே
செதுக்க உளியாம்.
நிறையைச் சொல்லி
குறையைச் சுட்ட அது
உண்மை விமர்சனமாய்
உன்னை வளர்க்கும்.
வள்ளல் பரம்பரை போல்
வார்த்தை நெருப்புகளை
வாரிக்கொட்டி
குறை சுட்டும் சிலருக்கு
பாராட்டுவதில் மட்டும்
கஞ்சத்தனம் ஏனோ?
செழித்து வளர
விமர்சனம் தேவை
ஊக்கமுடன் அதை
வெற்றிக்கு உரமாய்
எதிர் கொண்டால் உன்
வளர்ச்சி கண்டு
விமர்சிக்கும் வித்தகர்
விலகிச் செல்வர்.
நின்று கவனித்து
நேரம் போக்காமல்
இலக்கு நோக்கி
ஓடிக்கொண்டே இரு
தடுப்பு வேலிகளை
தகர்த்து எறிந்து
தடைக்கற்களை தாண்டிச் சென்று
வாழும் கலையை
வகுத்துக்கொண்டால்
தீ நாக்குகள்
தெறித்து ஓடும்