காதல்

மாம்பழக் குருவி அவள்
மகிழம்பூ அழகி அவள்.
தேன்பலாச்சுளை போலே
தெவிட்டாத அமிர்தம் அவள்

பூஞ்சோலை குயிலாக நான்
பாடுகின்றேன் அவள் ராகங்களை
காலையில் பூபாளமாக கவிகள் பல
பாடி நிற்கின்றேன்

தேடாத செல்வங்கள் கோடி
தேடி வரக்கண்டேன் அவளாலே
வாடாத மணம் பரப்பி என்னை
மயக்குகிறாள் அழகு செம்பருத்தி

மாதுளை மணிசிரிப்பில் மயக்குகிறாள்
அவளை மனதினில் சிறை வைத்து
மயங்குகின்றேன் தேன் மொழியாள்
என்னை தேடி வருவாளோ

பூரித்து போகும் உறவு தந்த
புன்னகை இளவரசி அவள்
வானத்து நட்சத்திரமாய் மனதில்
வனப்புற்று மின்னுகின்றாள்

வண்டாடும் செண்டாக அவளை
பண் பாடி வரவேற்பேன் நான்
வானவில்லின் வர்ணஜாலமென
என் மனதில் தோன்றும் எண்ணங்களால்

பொன்கொடி அவள் நினைவாலே
புதிதாக வந்த உறவாலே
ஆனந்த ராகங்கள் கோடி
ஆனந்தமாய் பாடுகின்றேன்

எழுதியவர் : Ranjeni K (24-Nov-20, 3:31 pm)
சேர்த்தது : Ranjeni K
Tanglish : kaadhal
பார்வை : 216

மேலே