பார் போற்றும் பாரதி

பார் போற்றும் பாரதி
💪💪💪💪💪💪💪💪💪
எட்டுத்திக்கும் மக்களைத் தீப்பந்தம் கட்டவச்சி
எட்டயபுரம் ஈன்றெடுத்த சிவகாசித் தீக்குச்சி
வல்லமை கருவிலேயே வளர்த்துக்கொண்ட நெஞ்சுரம்
செல்லம்மாள் துணையென சிறுவயதுச் சுயம்வரம்

கண்ணும் கருத்துமான கல்வியறிவு நுன்னினிலே
பன்மொழித் திறனுனக்கு பதினோரு வயதினிலே
பருவத்தில் தமிழன்னை மனதினிலே இடம்பிடிக்க
பகவத்கீதை நூல்தன்னை தமிழிலே வடித்தெடுக்க

கோடிமக்கள் அனைவருமே கொத்தாக எழுச்சியுற
சுதேச மித்திரனே சொல்லாயுதம் பயிற்சிதர
சின்னச்சின்ன பிள்ளைகளை சிலிர்ப்பூட்டிய வண்ணமடா
கண்ணன்பாட்டும் குயில்பாட்டும் என்னஒரு எண்ணமடா

படிப்பறிவும் எழுத்தறிவும் பார்த்தறியாப் பாமரனும் --நீ
வடித்தெடுத்த கவிகேட்டு விழித்தெழுந்தான் தோள்குழுக்கி
எழுத்துக்களைத் திரியாக்கி எண்ணங்களைத் தீயாக்கி
அக்கினிக் குஞ்சொன்று அகிலமெங்கும் வெளிச்சம்தர

அடிமைத்தன விளங்குடைத்து ஆங்கிலேயன் கையிலிட
விடுதலை உணர்வுகண்டு வெள்ளையனே அச்சமுற
கரைதாண்டும் வெள்ளத்தை சிறைபோட்டுத் தடுத்தாள
சுதந்திரம் எனும்சத்தம் நிரந்தரமாய் ஒலித்ததுவே

ஆசைப்பட்ட சுதந்திரத்தை அடைந்துவிட்டேன் எனப்பாடிய
மீசைக்கவி குரல்கேட்டு மீளத்துடித்த மக்களிடை
பார்த்தசாரதி கோயில்யானை பரங்கியனுக்கு துணைபோக
முண்டாசுக் கவிவாழ்வில் முற்றுப்புள்ளி வச்சிருச்சு.......
க.செல்வராசு.

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

எழுதியவர் : க.செல்வராசு (17-Dec-20, 3:20 pm)
பார்வை : 148

மேலே