கடைசி சுவாசம்
செங்கல்லினால் அல்ல
செங்காந்தள் பூவினால்
கல்லறை செய்க
காதலி மென்மையானவள்!
காதலுக்கு மூச்சிருந்தபோது
ஊரே தள்ளியிருந்தது;
மூச்சிழந்த பின்
உலகமே
வேடிக்கை பார்க்க வருகிறது!
தனக்குப் பிடிக்காதவனை - நீ
சமாதி என்பான்.
சமாதியான பின்
சாமி என்பான்.
கல்லறை என்பது
மாண்டவர்க்கு வைக்கும்
கிரீடமா?
வாழும் போது
அரையடி கூடத்
தன் பேரில் இல்லை;
இதோ
ஆறடி! - ஆனால்
ஆளத்தான் ஆளில்லை!
இந்த ஆறடி மட்டுந்தான்
வருமான வரி
தீண்டுவதில்லை!
காதலைக் கொன்று
கல்லறையைக் கொண்டாட வேண்டாம்!
பல்லாயிரம் பேர்களின் சுவாசம்
கல்லறையை மோப்பமிடுகிறது.
அவள்
கடைசி சுவாசம் மட்டும்
காதுகளில் கேட்கிறது!
- விஜயகுமார்
பினாங்கு, மலேசியா