ஏக்கம்

ஏக்கம்
‘ஏங்க’ ‘ஏங்க’ சத்தம் கேட்டு கண் விழித்த பாபுவுக்கு முன்பு அவன் மனைவி கையில் ஆவி பறக்க காப்பியை கையில் வைத்துக்கொண்டு, போய் மூஞ்சியை கழுவிட்டு வந்து பேப்பரை படிச்சுட்டு இந்த காப்பியை குடிங்க. சொல்லிவிட்டு அருகில் இருந்த டேபிளில் வைத்து விட்டு சென்றாள். இவனுக்கு ஒரே ஆச்சர்யம், இவள் நம் மனைவிதானா? இவ்வளவு அமைதியாக என் மனைவி இது வரை என்னிடம் பேசியதே இல்லையே. ஆச்சர்யத்துடன் முகம் கழுவ சென்றான்.
நாற்காலியில் உட்கார்ந்து காப்பியை ருசித்து குடித்துக்கொண்டிருந்த பாபுவிடம் ஏங்க நீங்க பேப்பர் படிச்சுட்டு மெதுவா குளிச்சு ரெடியாகுங்க, நான் பசங்களை குளிக்க வச்சு ஸ்கூலுக்கு ரெடி பாண்ணிடுறேன். டிபன் பாக்ஸ் இப்ப எடுத்து வச்சுட்டு அவங்களை குளிக்க வைக்க போறேன், சொல்லியவாறு வேகமாக சென்றாள்.
காப்பி குடித்துக்கொண்டிருந்த பாபு இன்று என்ன நாள் என்று பார்த்தான். என் மனைவி இப்படியெல்லாம் பதவிசாக என்னிடம் பேசியதேயில்லையே யோசித்தவன் மெல்ல காப்பியை ருசித்து மீண்டும் செய்திதாளில் நுழைந்தான்.
சிக்னல் போட்டதை கவனிக்காமல் வெள்ளை கோட்டை தாண்டி நிறுத்தியவன் பயத்துடன் போலீசை பார்க்க அவர் சிரிப்புடன் கொஞ்சம் பின்னாடி போயிக்குங்க சார் என்று சொன்னார். பாபுவுக்கு ஒரே ஆச்சர்யம் இவர் நம்ம போலீஸ்தானா? இந்நேரம் காட்டு கத்தல் கத்தி எல்லோரையும் நம்மை நோக்கி வேடிக்கை பார்க்க வைத்திருப்பாரே,
அதே ஆச்சர்யத்துடன் வண்டியை ஆபிஸ் நோக்கி செலுத்தினான். “வணக்கம் சார்” செக்யூரிட்டியின் வணக்கத்துக்கு பதில் வணக்கம் செலுத்தியாவாறே என்ன ஆச்சு இன்னைக்கு? எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே, இப்படி நினைத்துக்கொண்டு தன் டேபிளை அடைந்தவன் ஆண்டவா இன்னைக்கு எல்லாமே நல்லபடியா நடந்துகிட்டு இருக்கு. இப்படியே நடக்க நீதான் அருள் புரியணும். மனமுருகு வேண்டிக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து அலுவலக உதவியாளர் அவனிடம் வந்து சார் மேனேஜர் உங்களை கூப்பிடறாரு என்றவுடன் கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. இருந்தாலும் மெல்ல எழுந்து மானேஜர் அறையை தட்டி அனுமதி பெற்று உள்ளே நுழைந்தான். வாங்க, வாங்க, புன் சிரிப்புடன் எழுந்து மேனேஜர் இவனை வரவேற்று “வாழ்த்துக்கள் பாபு” உங்களுக்கு ஒரு சந்தோசமான சமாசாரம் சொல்றேன், அமெரிக்காவுல இருக்கற நம்ம கம்பெனி பிராஞ்சுக்கு மூணு மாசம் டெபுடேசன்ல உங்களை போக சொல்லி இருக்காங்க. கூட உங்க குடும்பத்தையும், கூட்டிட்டு போறதுக்கு கம்பெனி அனுமதி கொடுத்திருக்கு, அவன் கையை பிடித்து குலுக்கு, குலுக்கு என்று குலுக்கினார்.
இவனுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சார் கண்களில் கண்ணீர் திரண்டது, நான் ஒரு சாதாரண கிளார்க், என்னை எப்படி கம்பெனி இந்த வேலைக்கு அனுப்பறாங்க, அதுவும் என்னை விட பல சீனியர்சும், நல்ல அறிவாளிங்களும் இருக்கும்போது, சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் கண்ணில் இருந்து கண்ணீர் கட கடவென கண்களில் இருந்து உருண்டது.
அமைதி அமைதி யார் யாருக்கு கிடைக்கணும்னு இருக்கோ அவங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். இது பத்தி நீங்க அலட்டிக்க வேண்டாம். இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கு, நீங்க கிளமபறதுக்கு, வேண்டிய ஏற்பாடுகளை ஆரம்பியுங்க.
விடை பெற்று வெளியே வந்தவனிடம் அங்குள்ள அனைவரும் கை குலுக்கி வாழ்த்து சொன்னார்கள். அவனுக்கு மனசு பர பரத்தது. மனைவியிடம் இந்த செய்தியை சொல்ல வேண்டும், இப்பொழுதே சொல்லாமா? என்று நினைத்தவன் வேண்டாம் சர்ப்பரைசாக குழைந்தைகள் அனைவரையும் கூட்டி வைத்து சொல்ல வேண்டும், நினைத்து கொண்டவன் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு தன் நாற்காலியில் உட்கார்ந்தான்.
இன்று உண்மையிலேயே நல்ல நாள் எனக்கு. வீட்டில் ஆரம்பித்து இதுவரை என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்க வைத்து கொண்டே இருக்கிறது. மாலையில் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் இருந்து போன், கொஞ்சம் வர முடியுமா?என்று சென்றவனை அக்கவுண்ட்ஸ் மேனேஜர் எதிரில் உடகார வைத்து, சார் வீடு கட்ட லோன் கேட்டிருக்கீங்க? எல்லாம் சரியாயிருக்கு, ஆனா நீங்க பத்து இலட்சம் கேட்டிருக்கீங்க, உங்க சர்வீஸ், இனி செய்யபோற சர்வீஸ் இதையெல்லாம் கால்குலேட் பண்ணா எட்டு இலட்சம் தான் கிடைக்கும். என்ன சொல்றீங்க? கேட்டவருக்கு என்ன பதில் சொல்வது என்று திகைத்தான் உண்மையில் இவன் எதிர்பார்த்த்து ஏழு இலட்சம்தான், இப்பொழுது எட்டாகவே தருவதாக சொன்னவுடன் போதும் சார், இதைய பாஸ் பண்ணி கொடுங்க சார், அடக்கத்துடன் சொன்னான்.
ஓகே மிஸ்டர் பாபு அடுத்து என்ன செய்யணும்னு நம்ம கிளார்க் சீனு உங்க கிட்டே சொல்வாரு, நீங்க குடும்பத்தோட அமெரிக்கா போறதா கேள்விப்பட்டேன், அதுவும் கம்பெனி செலவுல, ரொம்ப சந்தோசம், வாழ்த்துக்கள், போயிட்டு வந்து மத்த வேலையெல்லாம் செஞ்சு கொடுத்துடுங்க, முடித்துக்கொண்டார். நன்றியுடன் விடை பெற்று வெளியே வந்தான்.
மாலை வெளியே வந்தவனின் மனம் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது. உடனே வீட்டுக்கு செல்ல மனம் வரவில்லை, மெல்ல லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு சென்றவன் நரசிம்மர் முன்பு மனமுருகி நின்றான். எதுவும் வேண்ட தோன்றவில்லை, ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவன் வீட்டுக்கு திண்பண்டங்களும், சில பொருட்களும் வாங்க கடை வீதிக்குள் வண்டியை நுழைத்தான்.
வீட்டிற்க்குள் நுழைந்தவன் தன் மனைவியையும், குழந்தைகளையும் ஒரு சேர அழைத்தான். படித்துக்கொண்டிருந்த குழந்தைகளுடன் அவன் மனைவி வர அவர்களை நிற்க வைத்து வாங்கி வந்திருந்த பொருட்களை மனைவி கையிலும், குழந்தைகள் கையிலும் கொடுத்தான். மனைவி வியப்புடன் ஏதுங்க இவ்வளவு சாமான்களை வாங்கிட்டு வந்திருக்கறீங்க? என்றவளை இங்க வா என்று அவள் தோளை பற்றி முன் நிறுத்தி இன்னும் பதினைந்து நாள் கழிச்சு நாம் எல்லாம் அமெரிக்கா போகப்போறோம். மனைவி விரித்த கண்களை மூடாமல் நிசமாவா சொல்றீங்க? என்றவளை ஆமாம், அவள் தோளைப்பற்றி சொன்னான். குழந்தைகளும் “ஹோ,”ஹோ” என்று கத்திக்கோண்டு அவன் மீது ஏறி அவனை உலுக்கின.
உலுக்கி உலுக்கி அவன் கண்டு கொள்ளாததால், தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தன. தண்ணீர் பட்டவுடன் முகத்தை துடைத்து பார்த்தவனை சுற்றி அவன் குழந்தைகள் நின்று கொண்டு “ஸ்கூலுக்கு நேரமாச்சு குளிச்சு வுடு” என்று கோரசாய் கத்தின. விழித்து பார்த்தவன் “விழித்த படியே இதுவரை கண்டது கனவா” துக்கத்துடன் எழுந்து குழந்தைகளுடன் குளியலறைக்குள் சென்றான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Apr-21, 10:44 am)
Tanglish : aekkam
பார்வை : 333

மேலே