திருட வந்தவன்

திருட வந்தவன்

இரவு மணி இரண்டு இருக்கும், அந்த தெருவில் விளக்குகள் ஒரு சில எரியாமல் இருந்ததால் அந்த இடங்களில் இருள் சூழ்ந்திருந்தது. அந்த ஏரியாவே ஒரு சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. வாகனங்களின் நடமாட்டம் கூட இல்லை. பாதையை ஒட்டி பங்களாக்கள் வரிசையாக இரு புறமும் இருந்தன. ஒவ்வொரு பங்களா கேட்டின் முன்புறம் மரங்கள் வளர்க்கப்படிருந்தன. அவை அந்த பங்களாக்களை மறைத்தாற் போலிருந்தது.. பங்களாக்களின் கேட்டை ஒட்டி உள் புறம் இரவு காவலர்கள் தங்குவதற்கு சிறிய அறை கட்டப்பட்டிருந்தது. அவர்களின் இரவு காவல் நடமாட்டமும் அவ்வப்பொழுது விசில் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவு பூச்சிகளின் ரீங்கார ஒலிகளும் அவ்வப்பொழுது கேட்டுக்கொண்டிருந்தன.
அந்த இருள் சூழ்ந்த பிரதேசத்தில் ஒரு மரத்தின் அடியில் பதுங்கியிருந்த உருவம் மெல்ல எழுந்து பாதையில் வந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தது. எந்த அசைவும் காணப்படாமல் இருந்தது தெரு. மெல்ல முன்னேறி ஒவ்வொரு பங்களாவாக பார்த்து நடந்தது. குறிப்பிட்ட பங்களாவை பார்த்தவுடன் தன்னுடைய நடையை நிறுத்தி கேட் அருகில் வந்து நின்று அதில் காணப்பட்ட ஓட்டை வழியாக உள்ளே உற்று நோக்கியது. உள்ளிருந்து காவலர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மீண்டும் குனிந்து ஒரு கல்லை எடுத்து உள்ளே வீசியது. அதற்கும் எந்த அசைவுக் காணப்படவில்லை.
மெல்ல கேட்டின் மீது கால் வைத்து ஏற ஆரம்பித்தது. உச்சியில் ஏறி அந்தப்புறம் காலை வைத்து கீழே இறங்குவதற்கு வழியை தேடியது. குதித்தால் சத்தம் எழும்பும் என முடிவு செய்த அந்த உருவம் தன்னுடய காலை வைக்க வாகான ஒரு இடம் தேடியது. கால் அங்கும் இங்கும் அலைந்து கேட்டின் தாழ்ப்பாள் அகப்பட அதில் தனது காலை வைத்து இந்தப் புறம் இறங்கி மெல்லமாக தன்னுடலை இறக்கியது. இறங்கியவுடன் வேகமாக நகர்ந்த உருவம் அங்கிருந்த புதருக்குள் தன்னுடலை நுழைத்துக்கொண்டு அந்த பங்களாவின் சுற்றுப்புறத்தை நோட்டமிட ஆரம்பித்தது.
ஐந்து நிமிடங்கள் கழித்து எந்த அசைவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டது. நடக்கும் சத்தம் கூட வராமல் மெல்ல அந்த பங்களாவை நோக்கி நடக்க ஆரம்பித்தது.பங்களாவின் முன்புறம் வந்து நின்று பார்த்து விட்டு இடப்புறமாக வந்து ஏறுவதற்கு வசதியை தேடியது. கொஞ்சம் தள்ளி இருந்த பெரிய ‘பைப்’ ஒன்று மேலிருந்து கீழ் நோக்கி சுவற்றில் இணைக்கப்படிருந்ததை பார்த்ததும் அந்த ‘பைப்பை’ பிடித்து தன்னுடலை ஏற்றிப்பார்த்து ‘பைப்’ அசையாமல் இருந்த்தை உறுதி செய்தது. பின் அந்த ‘பைப்பை’ பிடித்து சர சரவென ஏற ஆரம்பித்தது. பைப்பின் இணைப்பின் இறுதியில் இருந்த உருவம் மெல்ல தன்னுடைய காலை அகட்டி அங்கிருந்த கம்பி ஒன்றில் காலை வைத்து தன்னுடைய உடலை சுவற்றோடு தேய்த்து மாடியின் வராண்டாவில் இறங்கியது.
இப்பொழுது தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்ட உருவம் மாடியின் வராண்டா இரு புறமும் செல்வதை பார்த்து வலது புறமாக நடக்க ஆரம்பித்தது. வரிசையாக அமைந்திருந்த அறைகளை ஒவ்வொன்றாய் நோட்டமிட்டு வந்த உருவம் ஒரு அறையின் முன்புறம் நின்று அந்த கதவின் பிடியை திறக்க முயற்சி செய்தது. திறக்க முடியாததால் பூட்டியிருக்க வேண்டும் என்று முடிவு செய்து தன்னுடைய கால் சட்டைப் பையில் கையை விட்டு ஒரு கம்பி போன்ற ஒன்றை எடுத்து அந்த கதவின் சாவித் துவாரத்தின் வழியாக திருக ஆரம்பித்தது, பத்து நிமிடங்களில் “கிளிக்” என சத்தம் வந்து கதவு மெல்ல திறக்கப்பட்டு உருவம் உள்ளே வந்து விட்டது.
உள்ளிருந்து கீழே பார்க்க எல்லா இடங்களுக்கும் இங்கிருந்தே செல்லலாம் என புரிந்து கொண்ட உருவம் இப்பொழுது வேகமாக கீழ்த்தள படிக்கட்டு வழியாக இறங்க ஆரம்பித்தது. ஒவ்வொரு அறையாக பார்த்து பார்த்து நடந்த உருவம் குறிப்பிட்ட அறையின் முன் நின்று அதன் ‘கைப்பிடியை’ திருகி பார்க்க அது பூட்டியிருப்பதை உறுதி செய்து கொண்டது. மீண்டும் தன் கால் சட்டைப் பையிலிருந்து கம்பியை எடுத்து சாவித் துவாரத்தில் நுழைத்தது.
இப்பொழுது ஒவ்வொரு அலமாரிகளும் அந்த உருவத்தால் திறந்து பார்க்கப்படுகிறது. ஒரு அலமாரி திறந்த பொழுது நகைகளும், பணக்கட்டுகளுமாய் காணப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்த உருவம் அங்கிருந்த ஒரு ‘மேசை விரிப்பை’ உருவி அதனுள் அங்கிருந்த நகைகள், பணக்கட்டுகள் அனைத்தையும் எடுத்து ஒரு மூட்டை போல கட்ட ஆரம்பித்தது. கட்டி முடித்தபின் நிதானமான அந்த உருவம் அதை தோளில் போட்டுக்கொண்டு அடுத்த அறையை தேடி சென்றது. இது போல நான்கைந்து அறைகளுக்குள் போன உருவம் வெளியே வரும் போது புதிது புதிதான மூட்டைகளை தோளில் சேர்த்து இருந்தது.
ஓரளவு திருப்தி அடைந்த அந்த உருவம் இனி மீண்டும் மாடி எறி “பைப்” வழியாக இத்தனையும் வைத்துக் கொண்டு இறங்குவது சிரமம் என நினைத்து கீழ் தளங்களில் வழியாகவே நடந்து முன் கதவை நோக்கி நடந்து வந்தது. முன் அறையை தாண்டினால் அடுத்தது கதவுதான், அறையை தாண்டி செல்ல முற்படும்போது “தடால்” என்று உள்ளே ஒரு சத்தம் “திடுக்கிட்ட அந்த உருவம்” பதுங்குவதற்கு ஒரு இடத்தை தேடி பாய்ந்து சென்றது. மாடிப்படியின் அடியில் ஒரு இடம் கிடைக்க அங்கேயே தன் உடலை நுழைத்து மூச்சு காட்டாமல் உட்கார்ந்து அந்த அறையையே பார்த்துக் கொண்டிருந்தது.
உள்ளிருந்து மூச்சு இழைக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. யாரோ வேக வேகமாக மூச்சை இழுக்க முயற்சி செய்வது போல இருந்தது. முடியாமல் “ஐயோ அம்மா” என்ற முனகல் கேட்டது. அந்த உருவம் ஒரு நிமிடம் யோசிப்பது போல இருந்தது. பின் மெல்ல அந்த அறையின் முன் சென்று கதவை திறக்க முயற்சித்தது, திறக்கவில்லை. மீண்டும் வேகமாக திறக்க முயற்சி செய்தது. இரண்டு நிமிட போராட்டத்திற்கு பின் கதவு திறக்க உள்ளே பார்த்த உருவம் அதிர்ந்து போனது.
அங்கு மார்பை பிடித்துக்கொண்டு ஒருவர் வலியால் துடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. தண்ணீர் தண்ணீர் என்று கதறுவதும் கேட்டது. ஒரே நிமிடம் யோசித்த அந்த உருவம் தன் தோளில் வைத்திருந்த அத்தனை மூட்டைகளையும் இறக்கி விட்டு ஓடிச்சென்று அவரை மெல்ல தூக்கி படுக்கையில் படுக்க வைத்தது. அவர் அந்த வலியிலும் அந்த…அந்த..’ஷெல்பில்’ மாத்திரை இருக்கு திக்கி திணறி சொல்ல இந்த உருவம் வேகாமாக சென்று அலமாரியை திறந்தது. அதில் ஏராளமான புட்டிகள் இருக்க, எது என்று தெரியாமல் திணற ‘பச்சை’ ‘பச்சை’ என்று இவர் தினறலுடன் சொன்னார். பச்சை புட்டியை கண்டு பிடித்து அவசர அவசரமாக திறந்து ஒரு மாத்திரையை எடுத்து பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை திறந்து மாத்திரையை அவர் வாயில் போட்டு தண்ணீர் பாட்டிலை அவர் வாயிற்குள் கவிழ்த்தது.
தண்ணீரும் மாத்திரையும் இறங்கி ஐந்து நிமிடங்களில் அவர் துடிப்பு அடங்கினாலும் “ஐயோ அம்மா ‘ என்று அனத்திக் கொண்டே இருந்தார். யாராவது வருவார்களா என் பத்து நிமிடம் பார்த்து நின்று கொண்டிருந்த அந்த உருவம் ஒரு தீர்மானத்துக்கு வந்தது போல அங்கிருந்த போனை நெருங்கி நூறுக்கு அழுத்தியது.
“இங்க ஒரு நோயாளி உயிருக்கு போராடிகிட்டிருக்காங்க “
“ஹலோ” இது அவசர போலீஸ், நீங்க ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணுங்க”
எனக்கு உங்க நம்பர்தான் தெரியும், நீங்கதான் உதவி பண்ணனும்.
“ஹலோ உடனே’ ஆஸ்பிடலுக்கு போன் பண்ணறோம், இடம் சொல்லுங்க,
சரியான இடம் தெரியாது, ஒரு தியேட்டர் வரும், அதை தாண்டி ஒரு ரோடு வரும், அடுத்து ஏழெட்டு பங்களா இருக்கும், வலது பக்கம் கேட்டுல தாமரை படம் போட்டிருக்கும், அந்த வீடுதான் சீக்கிரம் வாங்க.
அது சரி நீங்க அங்கேயே இருங்க, நாங்க வந்துகிட்டே இருக்கோம்,
மன்னிச்சுங்குங்க, நான் இருக்க மாட்டேன்.
என்ன நீங்க இருக்கமாட்டீங்களா? அப்ப நோயாளிக்கு நீங்க என்ன ஆகணும் ?
நான் இந்த வீட்டுல திருட வந்திருக்கேன். என் வேலை முடிஞ்சுது, நீங்க சீக்கிரமா வந்து இந்த நோயாளி உயிரை காப்பாத்துங்க. !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (28-Apr-21, 3:45 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : thiruda vanthavan
பார்வை : 193

மேலே