கலைஞரின் எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்கள்

கலைஞர் சாதனைகளின் தலைவர் ,62 ஆண்டுகள் சட்டமன்றப் பணி 50 ஆண்டுகள் கட்சியின் தலைவர் பணி, 5 முறை முதலமைச்சர் பணி, 13 முறை சட்டமன்ற உறுப்பினர் . இத்தனை பணிகளுக்கிடையே . நாடகம், திரைப்படம், இலக்கியம், ஊடகம், சின்னத்திரை, அரசியல் களம் என அவர் முத்திரை பதிக்காத துறையே இல்லை .

இத்தனை செயல்கள் செய்த போதும் அவர் எளிய மக்களுக்கான மனிதநேய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினார் , கலைஞர் என்பது கட்டமைக்கப்பட்ட பிம்பம் இல்லை , தமிழகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கான வளர்ச்சியை தனது திட்டங்களால் கட்டமைத்ததனால் உருவான பிம்பம் , அவைகளை பற்றிய சிறு குறிப்புகள்

தனியார் வசம் இருந்த பேருந்து போக்குவரத்தை 1972ல் அரசுடமையாக்கினார். நாட்டிலேயே முதன்முறையாக அரசு போக்குவரத்து கழகங்களை உருவாக்கினார். கிராமங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம், குடிசை மாற்று வாரியம், , குடிநீர் வடிகால் வாரியம் போன்றவற்றை உருவாக்கியது கலைஞர். மேலும் மூன்றாம் பாலினத்தவர்கள், நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு நல வாரியத்தை உருவாக்கினார் . மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள். வார்த்தைகளை மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கையையும் மாற்றியவர்.

1989ல் பெண்களுகள் பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் பெண்களால் சுய தொழில்கள் உருவாகி சமூகமாற்றத்தை ஏற்படுத்தின .

இந்தியாவிலேயே முதல் முதலாகப் பரம்பரைச் சொத்தில் பெண்களுக்கும் சமப்பங்கு உரிமை அளிக்கும் சொத்துரிமைச் சட்டத்தை 1989 இல் கொண்டு வந்தவர் கலைஞர். முன்னதாக அம்பேத்கரால் கொண்டு வரப்பட்ட பெண்கள் சொத்துரிமை மசோதா கடந்த 1956 இல் தோற்கடிக்கப்பட்டது. அதை பின்னால் வந்த கலைஞர் நடைமுறைப் படுத்தினார்.

சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கலைஞர் ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

1996ம் ஆண்டில் நான்காம் முறையாகப் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருளை அவர்களே சந்தையில் விற்று நேரடியாகப் பலன் பெறும் வகையில் உழவர் சந்தைகளை தமிழகத்தின் பல பகுதிகளிலும் திறந்து வைத்தார்

தொலைக்காட்சியின் மூலமாக ஒரு சிலர் மட்டுமே அதிக விவரங்களை அறிந்தவர்களாக இருந்தனர் . அவர்கள் சொல்வதை கேட்டும் நம்பியும் வாழும் நிலைமையில் இருந்தனர் ஏழை எளிய மக்கள். இந்த நிலையில் கலைஞர் அவர்களின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டியின் மூலமாக ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை உடைத்து அனைத்து மக்களும் தொலைக்காட்சியினை கண்டு விவரங்களை அறிய வழிவகை செய்தார்


நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கலைஞர் தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது

கலைஞர் செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன.

கலைஞர் ஆட்சியில்தான் மருத்துவமனைகளுக்கான உயர்ரக உபகரணங்கள் அதிகம் வாங்கப்பட்டன. சி.டி. ஸ்கேன் கருவிகள், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் கருவிகள், ரத்தப் பரிசோதனைகளைத் துல்லியமாக உடனுக்குடன் அறிய உதவும் செமி-ஆட்டோ அனலைசர் (Semi-Auto Analyser) கருவிகள், மருத்துவப் பரிசோதனைக்காக மனித உறுப்புகளை வண்ணத்தில் படம் பிடித்துக் காட்டும் கலர் டோப்லர் (Colour Doppler) கருவிகள் எல்லாம் அரசு மருத்துவமனைகளுக்கு வந்தன.

மாவட்டம்தோறும் தலைமை மருத்துவமனைகள், தாலுகா அரசு மருத்துவமனைகளை கொண்டு வந்ததும் கலைஞரே. 3,000 க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்களை உருவாக்கினார். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் 24 மணிநேர சேவையை கொண்டு வந்தவர் கலைஞர்.


பள்ளி மாணவர்கள் தங்கள் கல்விக்காகப் பயணம் செய்வது சுமையாக இருக்கக்கூடாது என இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கொண்டுவந்தார் . தமிழகத்தில்தான் இப்படி முதல் முறையாக இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பெரும்பயனாக இருந்தது .

1971 ஆம் ஆண்டு முதல் 1976 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.கவின் ஆட்சிக் காலத்தில், மாநிலத்தின் முதல் வேளாண் பல்கலைக்கழகம் கோவையில் தொடங்கப்பட்டது. சேலம் பெரியார் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கவும் முக்கிய பணிகளை மேற்கொண்டார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியது தலைவர் கலைஞர் அவர்கள். இதற்காக, 1970-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் நாள் தமிழகச் சட்டப் பேரவையில் ‘அர்ச்சகர் சட்டம்’ கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், அர்ச்சகர் தேர்வில் வெற்றி பெறும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கர்ப்பக் கிரகம் சென்று கடவுளுக்குப் பூசை செய்யும் வழங்கப்பட்டது. ஆலயங்களில் நியமிக்கப்படும் அறங்காவலர்களில், தாழ்த்தப்பட்டச் சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒருவரையும் நியமிக்க வேண்டும் என்பதை மரபாக மட்டுமே கொண்டிருந்த நிலையை மாற்றி, எந்தவொரு ஆலயத்து அறங்காவலர் குழுவிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் நிச்சயம் இடம்பெற்றாக வேண்டும் எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.


ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான நடைமுறைகளில் மிகுந்த நம்பிக்கை கொண்ட கலைஞர், அரசு நிர்வாக வழங்கும் சேவைகள், தங்கு தடையின்றி விரைவாகவும், முழுமையாகவும் மக்களைச் சென்று அடைந்திட வேண்டுமென்ற நோக்கத்துடன், அரசுத் துறைகளை கணினிமயமாக்கினார்..

வருமுன் காப்போம் திட்டம்' பல லட்சம் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ உதவியைப் பெற்றுத்தந்தது. இத்திட்டத்தின் மூலம் 2006 - 2011-ம் ஆண்டுகளில் 14 ஆயிரத்து 594 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன

1966-ம் ஆண்டுத் தமிழ்நாட்டில் 6,993 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இவற்றில் 3 லட்சத்து 84 ஆயிரத்து 967 தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், 2010-ம் ஆண்டுத் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 515 ஆக உயர்ந்தது. அவற்றில் வேலை பார்த்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 45 ஆயிரத்து 928 ஆக அதிகரித்தது. தி.மு.க அரசு கடைபிடித்த தொழிலாளர் கொள்கையும், தொழில் முனைவோருக்கு அளித்த பல்வேறு ஊக்கமும் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் பெருக காரணமாய் அமைந்தன.

ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதமாக, இவரது ஆட்சியில் 2008 செப்., முதல், 108 ஆம்புலன்ஸ் இலவச சேவைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எழுதியவர் : பாவி (15-Jun-21, 10:59 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 125

சிறந்த கட்டுரைகள்

மேலே