எங்கே சுதந்திரம்

எங்கே சுதந்திரம் ...?

கொடியேற்றிக் கொண்டாட
விடுமுறையென அறிவித்து
இல்லங்களில் ஓய்வெடுத்து
இன்றைய நிகழ்ச்சிகளென
தொலைக்காட்சி பார்த்து
விடுதலைக்காக போராடி
உயிர்நீத்த தியாகிகளை
மறந்து மகிழ்ந்திருப்பதா ?

சாதிக்கொரு சங்கம்
வீதிக்கொரு கட்சியென
தொடங்கி ஆர்ப்பரிப்பது
அமைதியை சீர்குலைத்து
மதவெறியை தலைக்கேற்றி
வாய்ச்சவடால் வாளேந்தி
வன்முறையை கட்டவிழ்த்து
அனுதினமும் அரங்கேற்றி
அவலநிலை உருவாக்குவதா ?

சீர்கெட்ட அரசியலால்
சீரழிந்த சமுதாயத்தை
சீராக்கும் எண்ணமின்றி
சுயநல நோக்கமுடன்
சுத்தமிலா நெஞ்சங்கள்
சுற்றிச்சுற்றி உலாவரும்
செயல்படா செயலிகளாய்
செல்லரித்த நெஞ்சமாகி
மனிதமிழந்த தேசமானதே !

அழிக்கவியலா வறுமைக்கோடு
ஒழிக்கவியலா லஞ்சலாவண்யம்
தீர்க்கவியலா ஏற்றத்தாழ்வு
திருத்தப்படாத சட்டதிட்டங்கள்
வாழவியலா வாழ்வாதாரம்
பாதுகாப்பிலா சமுதாயம்
சுதந்திரமிழந்த கருத்துரிமை
இதுவன்றோ இன்றையநிலை !

ஆபத்தான ஆதிக்கவெறி
அழித்திடும் சக்திகளாகி
திணித்திடத் துடிக்கும்
மொழிமாற்றம் இனவாதம்
பழிவாங்கும் படலமாகி
வழிதேடி அலைகிறதே
வாழவேண்டிய தலைமுறை !


எங்கே சுதந்திரம் ?
என்று காண்போம்
உண்மை சுதந்திரம்
வாழ்கின்ற காலத்தில் ?


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (14-Aug-21, 2:55 pm)
பார்வை : 586

மேலே