கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல் உற்றார் உலகத்தவர் – நல்வழி 29

நேரிசை வெண்பா

மரம்பழுத்தால் வௌவாலை வாவென்று கூவி
இரந்தழைப்பார் யாவருமங் கில்லை - சுரந்தமுதம்
கற்றா தரல்போற் கரவாது அளிப்பரேல்
உற்றார் உலகத் தவர். 29

- நல்வழி

பொருளுரை:

மரம் பழுத்திருந்தால் (இப் பழத்தைத் தின்னுதற்கு) வா என்று வௌவாலைக் கூவி வேண்டி அழைப்பவர் அம் மரத்தருகில் ஒருவரும் இல்லை;

கன்றையுடைய பசுவானது பாலைச் சுரந்து கொடுத்தல் போல ஒளிக்காமற் கொடுப்பாராயின் உலகத்தார் (அவ் வௌவால் போலத் தாமே வந்து) உறவினராவார்.

கருத்து:

கொடையாளர்க்கு எல்லாரும் தாமே உறவினராவார்.

விளக்கம்:

ஒரு மரம் பழுத்தால் அது பறவைகளையோ, மனிதர்களையோ கூவி அழைக்க வேண்டிய அவசியமில்லை,

அது போல் அமுதசுரபி போல் அடுத்தவருக்கு இல்லை என்று சொல்லாமல் கேட்டதை கொடுக்கும் வள்ளல்களுக்கு அனைவருமே உறவினர். (கொடுக்கும் வரை தான் உறவு)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Sep-21, 2:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

சிறந்த கட்டுரைகள்

மேலே