குற்றந் தரூஉம் பகை மூன்று – திரிகடுகம் 86

இன்னிசை வெண்பா

அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல்
கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல்
நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும்
குற்றந் தரூஉம் பகை 86

- திரிகடுகம்

பொருளுரை:

அன்பினாலாகிய பெருந்தளையினது கட்டு தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும், கல்வியாகிய பெரிய தெப்பத்தை பொருள் முதலியவற்றின் விருப்பினால் முற்றும் விட்டுவிடுதலும், ஒருவரிடத்தில் வைத்த நட்பினால் நீதித் தன்மையினின்று நீங்குதலும் ஆகிய இவை மூன்றும் ஒருவனுக்குக் குற்றங்களை விளைக்கின்ற பகைகளாம்.

கருத்துரை:

உயிரிடத்தில் அன்பற்றிருப்பதும், பொருட்பற்றால் கல்வியை விடுதலும், நட்பினால் ஒருபாற் கோடுதலும் பகைபோற் குற்றந் தருவன எனப்பட்டது.

அற்புத் தளை: மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை;
அன்பாகிய தளையெனின் பண்புத்தொகையாம்.

கல்வி, ஒருவனை அறிவு நூல்களை யுணர்ந்து பொருளியலறிந்து பிறவிக் கடலைக் கடந்து வீடு பெறச் செய்வதால், பெரும்புணை யென உருவகிக்கப் பட்டது.

குற்றம் - இருமைப் பயனு மிழத்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-22, 3:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே