அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம் நிரம்புமேல் வீட்டு நெறி - ஏலாதி 24

நேரிசை வெண்பா

பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல் வீட்டு நெறி 24

- ஏலாதி

பொருளுரை:

நோயும், பிறத்தலும், கிழத்தனமும், இறத்தலும், முயற்சித் துன்பமும், போதுமென்னும் அமைதியில்லாத வறுமையும் ஆகிய இவைகள் உடனே அடையும்;

ஆதலால், ஆட்ட மேடையின்கண் மாறிமாறிப் புனையுங் கோலத்தினையுடைய ஆடுகின்றவரைப் போல மாறி மாறிப் பிறந்திறவாமல் துறவொழுக்கம் ஒருவன் நிரம்புவானாயின் அவனுக்கு இன்பம் உண்டாகும்.

பொழிப்புரை:

பிணியும், பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத இடும்பையும் என்றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்து உழலாதே வீட்டு நெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயின் நன்றாம்.

கருத்து:

ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்கள் உண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.

ஒருவனே பல்வகைக் கோலங் கொண்டு நாடக மேடையில் நடித்தல் போல, ஓருயிரே வேறுவேறு உடம்புடையதாய் உலகிற் பல் பிறப்பும் பிறந்து நிலவுதலின்; ‘அரங்கின்மே லாடுநர்போல்' என்றார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Apr-22, 7:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே