அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம் நிரம்புமேல் வீட்டு நெறி - ஏலாதி 24
நேரிசை வெண்பா
பிணிபிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம்
தணிவில் நிரப்பிவை தாழா - அணியின்
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்றாம்
நிரம்புமேல் வீட்டு நெறி 24
- ஏலாதி
பொருளுரை:
நோயும், பிறத்தலும், கிழத்தனமும், இறத்தலும், முயற்சித் துன்பமும், போதுமென்னும் அமைதியில்லாத வறுமையும் ஆகிய இவைகள் உடனே அடையும்;
ஆதலால், ஆட்ட மேடையின்கண் மாறிமாறிப் புனையுங் கோலத்தினையுடைய ஆடுகின்றவரைப் போல மாறி மாறிப் பிறந்திறவாமல் துறவொழுக்கம் ஒருவன் நிரம்புவானாயின் அவனுக்கு இன்பம் உண்டாகும்.
பொழிப்புரை:
பிணியும், பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத இடும்பையும் என்றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்து உழலாதே வீட்டு நெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயின் நன்றாம்.
கருத்து:
ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்கள் உண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்.
ஒருவனே பல்வகைக் கோலங் கொண்டு நாடக மேடையில் நடித்தல் போல, ஓருயிரே வேறுவேறு உடம்புடையதாய் உலகிற் பல் பிறப்பும் பிறந்து நிலவுதலின்; ‘அரங்கின்மே லாடுநர்போல்' என்றார்.