கசக்கும் காதல்

கசக்கும் காதல்...

மனமே அறிவின்
ஆதாரம் எனினும்
மனதிற்கு
அறவே இல்லையோ
அறிவென்பது?
உணர்ச்சிகளை உள்வாங்கி
உணர்த்துகின்ற மூளைதனில்
இல்லாதொழிந்த
உணர்வுச் செல் திரள்களைப்போல் !

பார்க்கத் துணியாதவர்க்காக
விழிகள் பிளந்து
பார்த்துக் களைப்பது !
பேசவும் மறுப்பவர்க்காகச்
செவிகள் திறந்து
காத்துக்கிடப்பது !

தொடவும் விரும்பாதவரையேத்
தேடித்தேடி
அலைந்துத் தொலைப்பது !

காத்துச் சலிப்பதையே
தவமெனப்
போற்றிப் பிதற்றுவது !

உள்ளொன்று வைத்து
உறவாடும்
என்மனமே -
உன்னோடு
மல்லுக்கு நிற்பதற்கு
மனவலிமைப் போதாதே !

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (13-May-22, 10:30 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 117

மேலே