முன்னின்று கூறும் குறளை தெரிதலால் பின்இன்னா பேதையார் நட்பு - பழமொழி நானூறு 113
இன்னிசை வெண்பா
இடையீ(டு) உடையார் இவரவரோ(டு) என்று
தலையாயார் ஆராய்ந்தும் காணார் கடையாயார்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
பின்இன்னா பேதையார் நட்பு 113
- பழமொழி நானூறு
பொருளுரை:
மேம்பட்ட குணங்களை உடையவர்கள் தம் நட்டார் மீது சிலர் கோள் கூறின், கோள் கூறிய இவர்கள் நம் நட்டாரோடு மாறுபாடு உடையவர் என்று நினைத்து அவர் கூறியனவற்றை ஆராய்ச்சி செய்து குற்றம் காண்பதிலர்;
கடைப்பட்ட குணங்களை உடைய கீழோர் தம் நட்டார் மேல் பிறர் வந்து கூறும் கோள்களை ஆராய்ச்சி செய்து அவர் குற்றங்களைக் காண்டலின் அறிவிலாரோடு கொண்ட நட்பு பின்னர் இன்னாததாக முடியும்.
கருத்து:
அறிவுடையோர் நட்டார் குற்றத்தைக் காணமாட்டார்கள், அறிவிலார் அவர் குற்றத்தை ஆராய்ந்து காண்பார்கள்.
விளக்கம்:
கூறுவோர் தம் நட்டாரிடத்துள்ள மாறுபாட்டால் கூறுகின்றார் என்றறிவதல்லது அவரிடத்து அக்குற்றங்கள் உளவாக அறியார் அறிவுடையோர்.
'பின் இன்னா' என்றமையால் கீழ்மக்களோடு கொண்ட நட்பு முதலில் மிக இனிமையாதல் பெறப்படும். கீழ்மக்களோடு தாம் கொண்ட நட்பினைத் தாம் விடினும் அவர்கள் விடாது நிற்றலால் 'இன்னா' என்றார்.
எனவே, அவரது நட்பினின்றும் நீங்குதலே இனிமை பயப்பதாம். அறிவிலார் நட்பு பின் இன்னா; எனவே, அறிவுடையோர் நட்பு முன் இன்னா; பின் இனிது என்பதும் அறியப்படும்.
'பின் இன்னா பேதையார் நட்பு' என்பது பழமொழி.

