உவர்நிலம் உட்கொதிக்கு மாறு - பழமொழி நானூறு 144
இன்னிசை வெண்பா
தமரல் லவரைத் தலையளித்தக் கண்ணும்
அமராக் குறிப்பவர்க்(கு) ஆகாதே தோன்றும்
சுவர்நிலம் செய்தமையக் கூட்டியக் கண்ணும்
உவர்நிலம் உட்கொதிக்கு மாறு. 144
- பழமொழி நானூறு
பொருளுரை:
சுவராகுமாறு மண்ணினைப் பிசைந்து பொருந்துமாறு சேர்த்த விடத்தும் உவர்மண் உள்ளே கொதிப்புண்டு உதிர்ந்து விடும். அதுபோல, தமக்கு உறவல்லாத பகைவரை தலையளி செய்தவிடத்தும் அவர்க்கு அது நன்மையாகத் தோன்றாது விரும்பாத குறிப்பாகவே தோன்றும்.
கருத்து:
பகைவரை நட்பாகக் கோடலரிது என்றது இது.
விளக்கம்:
நன்மையும் பகைமை கருதித் தீதாகக் கருதப்படுமென்பார் 'அமராக் குறிப்பு' என்றார்.
பகைவரைச் சார்ந்தொழுகுவாரை அது செய்யலாமே யன்றி அவரை அங்ஙனம் செய்து கோடல் அரியதொன்றாம் என்க.
'சுவர் நிலம் செய்தமையக் கூட்டியக்கண்ணும் உவர் நிலம் உட்கொதிக்கு மாறு' என்பது பழமொழி.