நிறைந்திருக்கையில் குறை என்பது ஏது

இளங்காலை தென்றல் காற்று நம்மை தீண்டும்போது
செங்கதிரவனின் இளங்கதிர்கள் உடலில் படும்போது
வானம்பாடி குயிலின் இசை காதினை வருடும்போது
இறை உணர்ச்சி நம் மனதில் நிறைந்து வழியும்போது
நேர்மறை சக்திகள் நம் எண்ணங்களாய் பாயும்போது
அருகில் உள்ள ஆலயமணியின் ஓசை கேட்கும்போது
இன்று பொன்னான நன்னாள் என்று நினைக்கும்போது
மகிழ்ச்சியான அச்ச்சூழலில் காபியை அருந்தும்போது
அன்புடன் செய்யப்படும் உணவு மணம் கமழும்போது
முகமலர்ச்சியுடன் நல்ல சிற்றுண்டி சுவைக்கும்போது
வெளியே புறப்படுகையில் நம் மக்கள் வாழ்த்தும்போது
அலுவலகத்தில் மற்றவர் புன்முறுவல் செய்யும்போது
சக ஊழியர்களுடன் நாம் சேர்ந்து கடமை புரியும்போது
ஒவ்வொருவரின் குணங்களை பார்த்து ரசிக்கும்போது
மதிய உணவு ஊழியர்களுடன் ரசித்து உண்ணும்போது
உயரதிகாரி நம் வேலைகளை மெச்சி பாராட்டும்போது
நம் கீழ் பணி புரியும் ஊழியர்களை ஊக்குவிக்கும்போது
கடமை செய்த மனநிறைவு பெற்று வீடு திரும்பும்போது
மாலை சூரியன் முகத்துடன் வீட்டார் வரவேற்கும்போது
நொறுக்குதீனியும் காபியும் வயிற்றுக்குள் போகும்போது
நம் சிறுவர்கள் பெரியவர்களுடன் மகிழ்ந்து கூடும் போது
இரவு உணவை அளவாக குடும்பத்துடன் சாப்பிடும்போது
நமக்கு பிடித்த புத்தகத்தை சிறிது நேரம் படித்திடும்போது
புன்னகையுடன் உறவுகளுக்கு நல்லிரவு சொல்லும்போது
நடந்தவற்றிற்கு மனநிறைவுடன் நன்றிகள் நவிலும்போது
உறக்க அன்னை நம் கண்களுக்குள் இனிதே தவழும்போது
கோபம் பொறாமை வஞ்சகம் போன்றவற்றிற்கு இடமேது?

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (8-Aug-22, 8:45 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 56

மேலே