நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத் தானேது - உண்மை விளக்கம் 2
திருநெறி 4 – திருவதிகை மனவாசகங் கடந்தார் அருளியது.
நேரிசை வெண்பா
ஆறாறு தத்துவமே(து) ஆணவமே(து) அன்றேதான்
மாறா வினையேது மற்றிவற்றின் - வேறாகா
நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத்
தானேது தேசிகனே சாற்று. 2
- உண்மை விளக்கம்
பொழிப்புரை:
முப்பத்தாறு தத்துவம் யாது? அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது? வினை யாது? இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது? உன்னுடைய சொரூபம் யாது?
பரமேசுவரனுடைய திருநடம் யாது? பஞ்சாட்சரத்தின் உண்மை யாது?
குருமூர்த்தியே நீ அருளவேண்டும்.
பதவுரை:
ஆறாறு தத்துவம் ஏது - முப்பத்தாறு தத்துவம் யாது,
அன்றே தான் மாறா ஆணவம் ஏது - அநாதியே விட்டு நீங்காத ஆணவ மலம் யாது,
வினை ஏது - வினை யாது,
மற்று இவற்றின் வேறாக நான் ஏது - இம்மலங்களுக்கு வேறாகாமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது,
நீ ஏது - உன்னுடைய சொரூபம் யாது, நாதன் நடம் (ஏது) - பரமேசுவரனுடைய திருநடம் யாது,
அஞ்செழுத்துத் தான் ஏது - பஞ்சாக்கரத்தின் உண்மை யாது,
தேசிகனே சாற்று - குருமூர்த்தியே நீ அருளவேண்டும்.