இல்லறத்தான் ஆகான் இயல்புகள் – அறநெறிச்சாரம் 166
நேரிசை வெண்பா
விருந்து புறந்தரான் வேளாண்மை செய்யான்
பெருந்தக் கவரையும் பேணான் - பிரிந்துபோய்க்
கல்லான் கடுவினை மேற்கொண் டொழுகுமேல்
இல்வாழ்க்கை யென்ப(து) இருள் 166
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
தன்பால் வந்த விருந்தினரை ஓம்பாமலும், இரப்பார்க்கு ஒன்று ஈயாமலும், பெருமையிற் சிறந்தோரையும் மதியாமலும்,
மனைவி மக்களைப் பிரிந்து சென்று அறிவு நூல்களைக் கல்லாமலும் தீவினையை மேற்கொண்டு ஒருவன் வாழ்வானாயின் அவனால் நடத்தப்பெறும் மனைவாழ்க்கை அவனுக்கு நரகமேயாகும்.