தீப ஒளி அழகூட்டும் தீபாவளி

ஒரு ஆண்டில் பண்டிகைகள் பல வரும், போகும்
ஆயினும் தீபாவளி போல் ஒரு பண்டிகை வருமா?

இந்த ஒரு பண்டிகைக்கு மட்டுமே பலவற்றில் தள்ளுபடி
புத்தாடைகள் முதல் சடங்குகள் வரையிலும் தள்ளுபடி
அதிகமாக தங்கத்தை வாங்கிட, சேதாரத்தில் தள்ளுபடி
பாட்டாசு விலையை பல மடங்கு கூட்டி பின் தள்ளுபடி!

தீபாவளி நேரத்தில் நாம் உண்ணும் இனிப்புகள் கண்டபடி
ஒன்றா இரண்டா வீட்டில் செய்து ஆகாது இவை கட்டுப்படி!

இனிப்பு கடைகளில் வாங்கும் வகைகளோ அம்மாடி அப்பாடி
ரவாலட்டு மைசூர்பாகு பூந்தி லட்டு ரசகுல்லா சோன்பப்புடி
ஜாங்கிரி அல்வா பாதுஷா குலாப்ஜாமுன் என்று இஷ்டப்படி!

எல்லோருக்கும் பிடித்த மிக்சர் முறுக்கு தட்டை ஓமப்பொடி
தட்டை தேன்குழல் சீடை என அவரவர் வாய்ருசிக்கேற்றபடி!

விடிகாலை தலையில் எண்ணெய் தேய்த்து கங்கை நீராடி
புத்தாடை உடுத்தி, வீட்டு பெரியவர்களின் ஆசிகளை நாடி
தீபாவளி சிறப்பு மருந்தினை வாயில் இட்டு ருசிபார்த்தபடி
வேறு சிலர் கொண்டாடும் முறை வேறு அவர் முறைப்படி
எவரும் முதலில் வெடிப்பது காது அதிரும் பெரிய சரவெடி!

சிறுவர்கள் பயமின்றி விடுவதற்கு மத்தாப்பு, துப்பாக்கி கேப்பு
கண்கவரும் புஸ்வானம் சங்குசக்கரத்தின் வண்ணக்குவிப்பு
ராக்கெட் என்றால் யாருக்குத்தான் இல்லை ஒரு கிளுகிளுப்பு
நட்சத்திரங்களை தலைகுனிய செய்யும் இவற்றின் பளபளப்பு!

தீபாவளியன்று சர்க்கரை வியாதிக்காரரும் சுவைப்பார் இனிப்பு
அன்று இனிப்பை மறுத்தால் அவர் வாயில் நேரடியாக திணிப்பு
இப்பண்டிகை கூட்டுவது, ஒவ்வொரு குடும்பத்திலும் பிணைப்பு
எனவே தீபாவளிதான் மகத்தான பண்டிகை என்பது என் கணிப்பு!

தீபாவளி கொண்டாடும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
எனது இனிப்பு கலந்த, வெடி சத்தம் இல்லாத ஒளிமயமான
தீபாவளி மணம் தழுவிவரும் அமோகமான நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Oct-22, 7:31 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 106

மேலே