கற்பனையும் கவிதையும் கவிஞர் இராஇரவி

கற்பனையும் கவிதையும்! கவிஞர் இரா.இரவி!

கற்பனைக்கும் கவிதைக்கும் உறவு உண்டு
கவிதையின் மெருகிற்கு கற்பனை உதவுவதுண்டு!
கற்பனைக் கவிதைகள் படித்திட சுவைக்கலாம்
கற்பனைக் கவிதைகள் மனதில் நிலைப்பதில்லை!
உண்மைக் கவிதையே உள்ளத்தைத் தொடும்
உண்மை இருந்தால் உணர்ந்து படிக்கலாம்!
பார்த்ததை உணர்ந்ததை கவிதை வடிக்கலாம்
பண்பாட்டை ஒழுக்கத்தை கவிதையில் விதைக்கலாம்!
சமூக நீதிகேட்டு கவிதைகள் எழுதலாம்
சமூக அமைதிக்கு கவிதைகள் வார்க்கலாம்!
வரதட்சணை கொடுமைக்கு கண்டனம் கூறலாம்
வளமான வாழ்வுக்கு வழிகள் உரைக்கலாம்!
சாதிமத வேறுபாடு முடிவுரைகள் இயம்பலாம்
சகோதர உணர்வினை கவிதையில் ஊட்டலாம்!
ஏற்றத்தாழ்வுகள் நீங்கிட கவிதைகள் பாடலாம்
எங்கும் சமநிலை ஏற்பட கவிதைகள் ஆக்கலாம்!
தியாகத் தலைவர்களின் ஒப்பற்ற தியாகத்தை பகிரலாம்
தன்னலமற்ற தலைவர்களின் பண்பை பாராட்டி மகிழலாம்!
பெண்ணடிமைத்தனம் ஒழிப்பதற்கு போதனை வழங்கலாம்
பெண் விடுதலைக்கு வழிவகைகள் பாட்டில் பாடலாம்!
குழந்தைத் திருமணத்திற்கு கண்டனத்தைப் பதியலாம்
குழந்தைகள் வளர்ப்புப் பற்றியும் ஆலோசனை கூறலாம்!
மனதில் பட்ட நியாயங்களை பயமின்றி வழங்கலாம்
மண்ணில் அநீதி நடந்தால் தட்டிக்கேட்டு பாடலாம்!

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி! (24-Oct-22, 4:49 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 151

மேலே