431 உறுதியற்ற வாழ்நாளுக்கு உள்ளமே செய்வதென்ன - யாக்கை நிலையாமை 13
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)
பொன்றுநா ளின்னதென நிலையுண்டே வாழிசூழ்
..புவியோ ராயுள்
ஒன்றிரண்டு நாளெனினும் போதுநூ றாண்டென்றோர்
..உரையுண் டேனும்
இன்றோஇக் கணமோபின் னுறுங்கணமோ மாலையோ
..இரவோ சாவது
என்றோவென் றோருறுதி யில்லாத ஆயுளிதற்(கு)
..என்செய் வோமே. 13
- யாக்கை நிலையாமை, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”மனமே! இறக்கும் நாள் இன்னதென்று ஓர் உறுதி இருந்தால் கடல் சூழ்ந்த உலகினருக்கு வாழ்நாள் ஒன்றிரண்டு நாளாக இருப்பினும் போதும். அகவை நூறாண்டு உண்டு என்ற ஓர் உறுதியற்ற சொல் உண்டு;
என்றாலும், இன்றோ, இப்பொழுதோ, பிற்பொழுதோ, மாலையோ, இரவோ சாவது என்றோ ஓர் உறுதியில்லை. இத்தகைய ஆயுளை உடைய நாம் என்ன செய்வது” என்று கேட்கிறார் இப்பாடலாசிரியர்.
பொன்று நாள் – சாகும் நாள். ஆயுள் - வாழும் நாள்.