482 பொருளீந்தார்க்குச் சேர்ப்பள் பல அல்லல் – கணிகையரியல்பு 9

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
காய் 4 / மா தேமா

பொருளொன்று நாந்தந்த திவட்கதற்கில் லாமைபிணி
..பொய்பு ரட்டு
மருளொன்றுங் கட்காமங் கொலைகளவு சூதுவசை
..மரணத் தோடும்
இருளொன்று நரகமின்னு மிவள்பானாங் கொண்டதற்கோர்
..இலக்க முண்டோ
தெருளொன்றும் பாரினம்போற் சமர்த்தாக்கொண் டெவர்வணிகஞ்
..செய்ய வல்லார். 9

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

(மனமே!) பொதுமகளுக்கு நாம் கொடுத்தது அழியும் செல்வப் பொருள் ஒன்றே.

அவ்வொன்றினைப் பெற்று நமக்கு அவள் தந்த அழியாப் பொருள்களுக்கு அளவே யில்லை.

அவை; வறுமை, நோய், பொய், வஞ்சனை, மயக்கந்தரும் கள், நீங்காப் பெண் ஆசை, கொலை, களவு, கவறாடல், பழி, இழிவான சாவு, கழியாத் துன்ப அளறு என்க.

இவ் வகையாகத் தெளிந்த இவ்வுலகில் நம்மைப்போல் ஒன்றுக்குப் பன்னிரண்டாக வணிகஞ் செய்யும் திறமையர் யாவருளர்.

இல்லாமை - வறுமை. பிணி - நோய். புரட்டு - வஞ்சனை. மருள் - மயக்கம். சமர்த்தர் - திறவோர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Nov-22, 3:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே