பீச்சுப்பக்கம் காத்து

சுண்டல் விற்கும் பையன்: சார் சுண்டல், மேடம் சுண்டல் , சுண்டல் சூடா நல்ல வாசனையா இருக்கு
சார்: மேடம் சுண்டல் இருந்தால் ஒரு பாக்கெட் கொடு.
சார்: ???
&&&
சார்: ஏம்பா தம்பி இந்த சுண்டல்விற்கும் தொழிலை யார் உனக்கு சொல்லித்தந்தாங்க?
சுண்டல் விற்கும் பையன்: எங்க பாட்டனாருடைய பாட்டனாரின் கொள்ளுப்பாட்டனாரின் கொள்ளுபேத்தியோட கொள்ளுப்பேத்தியின் பையன்தான் சொல்லிக்கொடுத்தார்.
சார்: ???
&&&
சுண்டல் விற்கும் பையன்: ஐயா சுண்டல், அம்மா சுண்டல், இந்த வேர்க்கடலை சுண்டலை வாங்கிச் சாப்பிட்டால், லவ் இல்லேன்னா லவ் உண்டாகும். லவ் மட்டும் இருந்தா கல்யாணம் ஆயிடும். கல்யாணம் மட்டும் ஆயிருந்தா குழந்தை பிறக்கும்.
இளைஞன்: குழந்தையும் பிறந்திருந்தால்?
சுண்டல் விற்கும் பையன்: அதற்கும் கல்யாணம் ஆகிவிடும்.
இளைஞன்: ???
&&&
இளைய நங்கை: தம்பி எனக்கு மூணு பொட்டலம் சுண்டல் தாப்பா
சுண்டல் விற்கும் பையன்: அது என்னம்மா மூணு பொட்டலம் கணக்கு. ஒரு பாக்கெட் இல்லைன்னா இரண்டு பாக்கெட் தான் வழக்கமாக வாங்குவாங்க?
இளைய நங்கை: நீ கொடுக்கிற பாக்கெட்டில் சுண்டல் கம்மியாகத்தான் இருக்கு. அதனால மூன்று பாக்கெட் சுண்டல் வாங்கி அதை ரெண்டு பாக்கெட்டா பண்ணிட்டு, ஒரு பாக்கெட் சுண்டலை சாப்பிடுவேன்.
சுண்டல் விற்கும் பையன்: அப்படீன்னா ரெண்டாவது பாக்கெட்?
இளைய நங்கை: வீட்டிற்கு பஸ்சுல போகும்போது சாப்பிட
சுண்டல் விற்கும் பையன்: ???
&&&

காதல் ஜோடி: இந்தப்பா தம்பி, சுண்டல் சூடாக இருக்கா?
சுண்டல் விற்கும் பையன்: இருக்கு. ஆனால் உங்க அளவுக்கு சூடு இல்ல.
காதல் ஜோடி: ???
&&&
சுக்கு காபி விற்கும் பையன்: சொக்கு காபீ, சொக்கு காபீ, சூடா சொக்கு காபீ
காதலன்: அது சுக்கு காபீபா, ஏன் சொக்கு காபி சொக்கு காபீன்னு சத்தம் போடறே?
சுக்கு காபி விற்கும் பையன் (இளைஞனின் காதில் மெதுவாக) இந்த காபீய வாங்கி உங்க காதலிக்குக் கொடுத்தீங்கன்னா, அஞ்சு நிமிஷத்துல அவங்க சொக்கிப் போய்டுவாங்க. அப்புறம் என்ன உங்க ராஜ்ஜியம் தான்?
காதலி: அப்போ ரெண்டு சொக்கு காபி கொடு.
சுக்கு காபி விற்கும் பையன்: ரெண்டு எதுக்குங்க
காதலி: ரெண்டு காபி குடிச்சா நான் ரெண்டு நிமிஷத்திலேயே சொக்கி போய்விடலாமே.
காதலன் & சுக்கு காபி விற்கும் பையன்: ???
&&&
வயதானவர்: ஏம்பா புள்ள, சுண்டல் நல்லா வெந்திருக்கா?
சுண்டல் பையன்: நாலு கிலோ பட்டாணியை நாலு மணிநேரம் ஊற வச்சிட்டு பிறகு நாலு மணி நேரம் வேகவைச்சு பண்ண சுண்டல் தாத்தா.
வயதானவர்: எனக்கு ஒரு பல்லு கூட இல்லை. எனக்கு இந்த சுண்டலை சாப்பிட எவ்வளவு மணி நேரம் பிடிக்கும்?
சுண்டல் பையன்: நீங்க காலம் பூரா சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் தாத்தா.
வயதானவர்: ???
&&&
பெண்: இந்த பஞ்சு மிட்டாய் நல்லா இனிக்குமா?
பையன்: ஆமாம்மா. இதை சாப்பிட்டு பேசினா காதுல தேன் ஊத்தினமாதிரி இருக்கும்.
பெண்: அவ்வளவு இனிப்பா?
பையன்: இல்லம்மா, காதில தேன் ஊத்தினா எப்படி ஒட்டிக்குமோ அதைப்போலவே, மேல் நாக்கும் கீழ் நாக்கும் ஒட்டிக்கும்.
பெண்: ???
&&&
ஐஸ்கிரீம் பையன்: அம்மா வாங்க , அய்யா வாங்க சூடாக ஐஸ்கிரீம் சூடாக ஐஸ்கிரீம்
இளைஞன்: என்ன தம்பி உளறுகிறாய். சில்லுன்னு இருந்தாத்தான் ஐஸ்கிரீம் நன்றாக இருக்கும்.
ஐஸ்கிரீம் பையன்: (இளைஞன் காதில் ரகசியமாக) நீங்க அவங்களுக்கு இந்த ஐஸ் கிரீமை வாங்கித்தந்தா அவங்க சூடாயிடுவாங்க. அப்புறம் என்ன உங்க காட்டுல மழைதான்.
இளைஞன்: அப்படீன்னா, சில்லுன்னு நாலு கப் ஐஸ் ஸ்க்ரீம் கொடு.
இளைஞனின் காதலி: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Dec-22, 11:23 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 59

சிறந்த நகைச்சுவைகள்

மேலே