489 மாண்டார் காலில் புரிகட்டி இழுக்க வுரைப்பள் – கணிகையரியல்பு 16
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
தெரிவையின்நட் பறிவான்மாண் டெனக்கிடந்தேம் மாமிவந்த
..சிலரை நோக்கி
உரியபா டையிலிவனை யெடுமென்றாள் வீண்செலவேன்
..உலைந்தோன் காலிற்
புரிவீக்கி யிழுமென்றன் னம்பணித்தா ளதுசெய்யப்
..புகுந்தோர் தம்மைத்
தெரியாமல் உயிர்தப்பி யோடிவந்தோம் அங்குறிலெஞ்
..சீவன் போமே. 16
– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
பொதுமகளின் நட்பை அறியும்பொருட்டு இறந்துபோனவன்போல் கிடந்தோம். தாய்க் கிழவியாகிய மாமி வந்து, சிலரைப் பார்த்து `இறந்தார்க்குரிய பாடையினில் இவனை இடுங்கள் என்றனள்.
அன்னம்போன்ற பொதுமகள், `அழிந்தவன் காலில் வைக்கோல் புரியைக் கட்டி இழுங்கள் என்றனள். அவ்வாறு செய்யப் புகுந்தோரை மறைத்து உயிர்தப்பி ஓடி வந்தேம். அங்கே இருந்திருப்பின் எம்முயிர் போய்விடும்.
தெரிவை - பெண். உலைந்தோன் - அழிந்தோன்.