வெங்கோன்மை வேண்டும் எனினும் தண்கோல் எடுக்குமாம் மெய் - பழமொழி நானூறு 248

இன்னிசை வெண்பா

அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதெனினும்
தண்கோல் எடுக்குமாம் மெய். 248

- பழமொழி நானூறு

பொருளுரை:

அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்!

அரசன் பகையரசரிடம் கொடுங்கோன்மையைச் சிறிது காட்ட வேண்டுமாயினும், தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச் செங்கோன்மை உடையவன் இல்லையென்றால் ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும் தன்னைச் சேர்ந்தவர்களும் இகழ்வார்கள்;

தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே உண்மையாக வெற்றியைத் தோற்றுவிக்கும்.

கருத்து:

அரசனது வெற்றிக்கு அவனது செங்கோலே காரணமாம்.

விளக்கம்:

சேர்ந்தாரும் என்றமையானே பகைவரும் என்பது பெறப்படும். பகையரசர்களிடத்தே சிறிது கொடுங்கோன்மை கொள்ளினும், அதனைவிடத் தங்குடிகளிடத்தே செலுத்தும் செங்கோன்மையே வெற்றியைத் தர வல்லதாம்.

செங்கோலனாய் ஒழுகவே குடிகள் தம் உடல், பொருள், ஆவி மூன்றினையும் அவன் பொருட்டு அளிப்பராதலின் அவன் வெல்லுதல் உறுதியென்பார், ‘மெய்' என்றார்.

'தண்கோல் எடுக்குமாம் மெய்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Jan-23, 1:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே