வலிப்பு நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பதிவு சேகரிப்பு:
டேவிட் வெர்னர் அவர்கள் எழுதிய டாக்டர் இல்லாத இடத்தில் என்னும் புத்தகத்திலிருந்து...
இன்று வலிப்பு நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி இந்த பதிவில் காண்போம்.
வலிப்பு ஏற்பட்டவருக்குக் கையில் சாவி போன்ற ஏதாவது ஓர் இரும்புப் பொருளைக் கொடுத்தால் உடனே வலிப்பு நின்றுவிடும் என்று கூறுகிறார்கள். இப்படிச் சொல்வது சரியா?
சரியில்லை என்பதே உண்மையான பதில்
சாவி போன்ற இரும்புப் பொருளை வலிப்பு
வந்தவர்களுக்குக் கொடுத்தால் வலிப்பு நிற்கும் என்று சொல்வதற்கு எவ்வித மருத்துவ ஆதாரமும் இல்லை.
இது ஒரு மூட நம்பிக்கை. திரைப்படங்களிலும் தொலைக் காட்சி நாடகங்களிலும் இதுபோன்ற காட்சிகளைக் காண்பிப்பதால், இந்த நம்பிக்கை மக்களின் பொதுப்புத்தியில் பதிந்து விட்டது.
பொதுவாக, வலிப்பு சில நிமிடங்களுக்குள் தானாகவே நின்றுவிடும். அருகில் உள்ளவர்கள் இரும்புப் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கும் சில நிமிடங்கள் ஆகு மல்லவா?
இயற்கையாக உடலில் வலிப்பு நிற்பதற்கும் இவர்கள் இரும்புப் பொருளை வலிப்பு வந்தவருக்குக் கொடுப்பதற்கும் நேரம் சரியாக இருக்கும்.
காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான். மற்றபடி, வலிப்பு நிற்பதற்கும் கையில் சாவியைக் கொடுப்பதற்கும் தொடர்பில்லை.
இதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், வலிப்பு எப்படி ஏற்படுகிறது என்பதைக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்.
வலிப்பு ஏற்படும் விதம்
மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு அந்த செல்களுக்கிடையில் இயல்பாகவே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் உண்டாகிற அதீத அழுத்தத்தால் இந்த மின்சாரம் அபரிமிதமாக உற்பத்தியாகி, ஒரு மின்புயல் போல் கிளம்புகிறது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு, கை, கால்கள் உதறத் தொடங்குகின்றன. இதைத்தான் ‘வலிப்பு’ என்கிறோம்.
பூமியின் உள் அடுக்குகளில் உண்டாகிற அதிகப்படியான அதிர்வுகள் நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதைப் போல, மூளையில் உண்டாகிற மின் அதிர்வுகள் வலிப்புக்குக் காரணமாகின்றன.
என்ன காரணம்
தலையில் அடிபடுதல், பிறவியிலேயே மூளை வளர்ச்சிக் குறைபாடு, மூளையில் கட்டி, ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல், கிருமித் தொற்று, புழுத் தொல்லை, மூளைக் காய்ச்சல், மூளை உறை அழற்சிக் காய்ச்சல், டெட்டனஸ் போன்றவை வலிப்பு வருவதற்கு முக்கியமான காரணங்கள்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் வலிப்பு வருவதைத் தூண்டக்கூடியவையே.
பரம்பரையாகவும் வலிப்பு வரலாம்.
கர்ப்பிணிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்தால், பிரசவக் காலத்தில் வலிப்பு வருவதுண்டு.
பக்கவாதம், மூளையில் ஏற்படும் ரத்தக் குழாய் மாற்றங்கள், அல்சைமர் நோய், ரத்தத்தில் தட்டணுக்கள் மற்றும் சோடியம் அளவு குறைதல் போன்ற காரணங்களால் வயதானவர்களுக்கு வலிப்பு ஏற்படக் கூடும்.
சிலருக்கு மன உளைச்சல் காரணமாக கூட வலிப்பு வருவதும் உண்டு.
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு
குழந்தைகளுக்குக் காய்ச்சல் காரணமாக வலிப்பு வருவதுதான் அதிகம்.
பெரும்பாலும் ஆறு மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சாதாரணக் காய்ச்சலாக இருந்தால்கூட, உடலின் வெப்பம் திடீரென அதிகரித்தால் வலிப்பு வரும் சாத்தியம் அதிகம்.
வலிப்பு வந்தவர்களுக்கு என்ன முதலுதவி செய்ய வேண்டும்?
ஒருவருக்கு வலிப்பு வந்து விட்டது என்றால், அருகில் உள்ளவர்கள் சாவியைத் தேடி நேரத்தை வீணாக்குவதைவிடக் கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றலாம்
# அவரை ஒரு பக்கமாகச் சாய்த்துப் படுக்க வையுங்கள்.
சட்டை பொத்தான், இடுப்பு பெல்ட், கழுத்து ‘டை’ போன்ற வற்றைத் தளர்த்தி, நன்கு சுவாசிப்பதற்கு வழிவகை செய் யுங்கள்.
# மின்விசிறி / கைவிசிறி மூலம் நல்ல காற்றோட்டம் கிடைக்க வழி செய்யுங்கள்.
# அருகில் காயத்தை ஏற்படுத்தும் கூர்மையான பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள்.
# மூக்குக் கண்ணாடி, செயற்கை பல் செட்டை அகற்றிவிடுங்கள். உமிழ்நீர் வழிந்தால் துடைத்துவிடுங்கள்.
# ஒருவருக்கு வலிப்பு 5 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பது ஆபத்து. உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சையை அளிக்க வேண்டியது அவசியம்.
என்ன செய்யக்கூடாது?
# அவரைச் சுற்றிக் கூட்டம் கூட அனுமதிக்காதீர்கள்.
# வலிப்பு வரும்போது அவருடைய கை, கால்களை அழுத்திப் பிடித்து வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது.
# வலிப்பு நின்று, நினைவு திரும்பும்வரை அவருக்குக் குடிக்கவோ, சாப்பிடவோ எதுவும் தரக் கூடாது.
# முழு நினைவு வந்ததை உறுதி செய்து கொள்வதற்காக அவருடைய பெயரை கேட்கலாம். அதன் பிறகு அவருக்கு தண்ணீர் பருக கொடுக்கலாம்.
வலிப்பு நோய் ஒருவருக்கு எதனால் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள நிச்சயம் ஒரு நரம்பியல் மருத்துவரை அணுகி அதற்கான முறைப்படி சிகிச்சை பெற வேண்டும்.
நன்றி 🙏