புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை இன்சொல் இடர்ப்படுப்ப தில் - பழமொழி நானூறு 277

இன்னிசை வெண்பா

புன்சொல்லும் நன்சொல்லும் பொய்யின்(று) உணர்கிற்பார்
வன்சொல் வழியராய் வாழ்தலும் உண்டாமோ?
புன்சொல் இடர்ப்படுப்ப தல்லால் ஒருவனை
இன்சொல் இடர்ப்படுப்ப தில். 277

- பழமொழி நானூறு

பொருளுரை:

ஒருவனை வன்சொல் இடருட் படுத்துவதல்லது இனியசொல் இடருட் படுத்துவது இல்லை.

ஆகவே, இன்னாத சொல்லாலும் இனிய சொல்லாலும் வரும் பயனைக் குற்றமின்றி அறியவல்லார் வன்சொற் சொல்லி அதன் வழியே ஒழுகுபவராய் வாழ்ந்திருத்தலும் உண்டோ?

கருத்து:

இனிய சொற்களைச் சொல்லுக.

விளக்கம்:

வன்சொல் தன்னை உடையானை இடர்ப்படுத்துதல் நோக்கிப் புன்சொல் எனப்பட்டது .

'உணர்கிற்பார்' என்றது இன் சொல்லால் நன்மை விளைதலையும் வன் சொல்லால் தீமை விளைதலையும் அறிவார் என்றபடி. இரண்டனது கூறுபாடுணர்வார் வன்சொற் கூறுதலும் உண்டு கொலோ என்றார்.

'இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது' 99 இனியவை கூறல் - என்றதன் விரிவே இச்செய்யுள்.

'இன்சொல் இடர்ப்படுப்பதில்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 6:50 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே