நெஞ்சின் ஆதங்கம்

ஆன்மீக உபதேசம் செய்தும்
ஆத்மாப் பற்றியும் பேசிவிட்டு
கற்பனை உலகிற்கு வழிகாட்டி
விற்பனை செய்ய வரவில்லை !

நம்பிக்கை உள்ளோர் நம்பிடுக
வாதிக்கும் மேடையில் கும்பிடுக!
போதிக்க வரவில்லை அடியேன்
நாத்திகன் என்றாலும் நான் !

பொய்யை மெய்யெனக் கூறாது
மெய்யை உலகறிய உரைப்பதே
கடமையெனக் கருதும் பலரில்
நானும் இருப்பேன் வரிசையில் !

மண்வெளியில் நடப்பவர் எல்லாம்
விண்வெளியில் கலப்பது இயற்கை !
சாதிப்பவரை தெரியாத இவ்வுலகம்
வேடமிடுபவர் வழியில் செல்கிறது !

வானவில்லில் நிறங்களின் வேறுபாடு
மனவெளியில் மனிதர்களில் மாறுபாடு !
வரலாற்றில் இல்லை சாதிப்பாகுபாடு
நெஞ்சில் மட்டுமேன் பாகுபாடு !

வசதி உள்ளவன் உயர்ந்தவன்
ஏழ்மையில் வாடுபவன் தாழ்ந்வன்
பிரித்தாளும் இதயம் உள்ளோர்
கரித்துக் கொட்டுவதும் ஏனோ !

நிலை மாறுகிறது பதவிப் பெற்றதும்
விலை போகுது மக்கள் உரிமை !
உலைக் கொதிக்க வழியின்றித் தவிக்குது
உயிரைவிட தயாராகுது ஏழை வர்க்கம் !

சாதிவெறி பிடித்து ஆடுகின்ற சமூகம்
ஆதிக்க சக்திகளின் ஆட்டம் பாட்டம் !
உடமைகள் இழந்த, தாழ்ந்த சமுதாயம்
மடமைகள் ஆனது அடிமைகள் கூட்டம் !

எதிலும் பிரிவினை எங்கும் சர்ச்சைகள்
மாற வேண்டும் மக்களின் மனங்கள் !
உருமாறத் துடிக்கும் இளைய தலைமுறை
உருவாக்க வேண்டும் நவீன பாரதம் !

விழுந்து இருப்பவர் நெஞ்சின் ஆதங்கம்
எழுந்து நின்றிட நாளைய இளையோரே
வேடம் கிழித்தெறிந்து பாடம் புகட்டுவீர்
மாடத்தில் நிற்பவர் கீழிறங்க செய்வீர் !

அறிவுத் திறனால் அகிம்சை வழியில்
தெளிவுப் பிறக்க தாழ்ந்தவர் சிறக்க
உறங்கும் சமுதாயம் விழித்துக் கொள்ள
இளைஞர் படை இணைந்து செயலாற்று !


பழனி குமார்
25.03.2023

எழுதியவர் : பழனி குமார் (25-Mar-23, 3:26 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : nenchin aathankam
பார்வை : 87

மேலே