குற்றால சீசன்
கோடைக் காற்று வீசும்
நெல்லை.. குளிர் காற்று வீசும்
குற்றாலம்... இணைக்கும்
சாலைப் பயணம்...
ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதம்
ஈர்க்கும் ஈரக் குற்றாலம்..
உள்ளூர்க்காரர்களுக்கும்
ஊர் புதிதாய் தோன்றும்..
ஒவ்வொரு வருடமும்
குற்றாலம் வந்து போகவும்
சுகந்தங்களை சுமந்து செல்லவும்
வெளியூர்க்காரர்களும்
போடுவர் தீர்மானம்...
தென்மேற்கு திசையும்
கன்னிமூல கணபதியும்
அருள்பாலிக்கும் தமிழகம்
அதன் வசந்த அடையாளம்
திருக் குற்றாலம்...
குற்றால வானம்
தவழ்கிற மேகம்
வந்தவர் யாவரையும்
வரவேற்றுப் போகும்...
கழுத்து குளிரும்
காதுகள் ஏதோ உணரும்
முகத்தின் மொத்தப் பரப்பிலும்
புதுத்தென்றல் முத்தமிடும்..
அதில் மொத்த தேகமும்
மலர்வதாய் தோன்றும்...
சாரல் விழும்...
தவழும் தென்றல் தழுவும்
உற்சாகம் தரும்..
கடந்து போகும்..
இன்னும் இன்னும்
சாரல் விழும்...
தவழும் தென்றல் தழுவும்..
உற்சாகம் தரும்..
கடந்து போகும்..
குற்றால திசை நோக்கும்
திறந்த ஜன்னல்கள் தோரும்
புதுத் தென்றல் பூ வசந்தம்..
பூஞ்சோலைகள் தரும்
ஆனந்த சுகந்தம்...
குற்றாலம் செல்லும்
சைக்கிள் பயணம்...
வீசும் எதிர் காற்றும்.. ஊடும்
உயிர்க் காதலியும் ஒன்றாம்..
கைகளால் தள்ளி காதலால்
இழுக்கும் லீலைகள் நன்றாம்..
பூக்கள் நனையும்...
கற்கள் மணக்கும்
பாக்கள் பிறக்கும்...
தேவை இருக்காது பெர்ஃப்யூம்..
அழகு குற்றாலம்
அதில் குளிப்பது உற்சாகம்..
சாரல் கலந்த காற்றும்
மூலிகை மோதும் தென்றலும்
தேகம் வருடிச் செல்லும்..
ஆடவர் கேசம் மிளிரும்..
குற்றாலம் குளித்த மகளிரும்
தன் கேசம் தானே பார்த்தும்
பார்ப்பவர் பார்த்தும்
கொள்வர் மிகுந்த கர்வம்...
தீவுகளுக்குத் தேனிலவு செல்லும்
புதுப் பொண்ணு மாப்பிள்ளையும்
காதல் வளர்க்கும் குற்றாலம்
பழத்தோட்டம் பார்த்தும்
போட்டோ ஷூட் எடுத்தும்
பகிர்வர் சமூக வலைத்தளம்...
ஊர்ந்து செல்லும் பாம்பும்
பாய்ந்து செல்லும் கீரியும்
அழகியல் சொல்லும்..
மந்தி கொஞ்சும் வானரம்..
அதனைப் பார்த்து மாந்தரும்
தன் இதய சிம்மாசனம்
கவர்ந்து இருந்தவரையும்
கற்பனையில் அழைத்து வரும்..
கைகோர்த்து நடக்க வைக்கும்..
கைகோர்த்து நடக்கும் நாடகம்..
எழுதி வைத்து பேச வைக்கும்
எழுதாதையும் பேச வைக்கும்
பேச வைத்து எழுத வைக்கும்..
பேசாததையும் எழுத வைக்கும்
நாட்குறிப்பு ஒன்று மனதிலும்
எழுதிக் குவிக்கும்...
மா பலா வாழை தோற்கும்...
இரவுக்குளியல் வாடைக்காற்றிலும்
குளிர்ந்த அருவி நீரிலும்
உடம்பு நடுங்கும்...
உடுத்திய துண்டும் நடுங்கும்..
சிறு மழைக்கு மரம்
குடை பிடிக்கும்..
மழை நின்ற பின்பும்
மரம் தூறல் விடும்..
தேனருவிப் பாதையும்
செண்பகா தேவி வழியும்
பாறைகள் வழுக்கும்
மரக்கிளைகள் கைகொடுக்கும்..
மரங்களினூடே நுழைந்தும்
கிளைகளினூடே புகுந்தும்
தரை தொடும் சூரிய வெளிச்சம்
புது ஜாலமிடும்...
இனிமை மிகுந்த சூழலிலும்
மனதை மயக்கும் சாரலிலும்
கண் காது மூக்கும்
மெய் வாய் ஐம்புலன்களும்
ஆனந்தக் கூத்தாடும்..
ஓராண்டு யோகா செய்யும்
உடல் ஆரோக்கியம்
ஓரிருநாள் குற்றால பயணம் தரும்
ஆலங்குளம்.. அம்பாசமுத்திரம்
குமந்தாபுரம்.. பகவதிபுரம்
திசைகள் நான்கிற்கும்
வேர்வைகள் விடை பெறும்
எல்லைகள் ஆகும்..
கண் தூங்கிப் பயணித்தாலும்
வந்து விட்டது குற்றாலம்
என்று தேகம் சொல்லும்...
அறங்கள் கூறும்...
நல்லதே செய்தால் சொர்க்கம்..
குற்றாலம் பழைய குற்றாலம்
ஐந்தருவியும் சிற்றருவியும்
புலியருவி தேனருவியும் நாம்
எது செய்தாலும் சொர்க்கம்...
வானம் தொடும் மரங்களும்
வசந்த முல்லை மலர்களும்
வசீகர மலைகளும்
மனங்கவர் வனங்களும்
நீர் வீழ்ச்சிகளும்
மலர்ப் பொய்கைகளும்...
சந்திரனும் சூரியனும்
கொண்டாடி மகிழும்
நட்புப் பிரதேசம்..
வாடைக் காற்றும்
தாழம்பூ வாசமும்
சொல்லிய கதைகள் சொல்லும்..
சொல்லாத கதைகளும் சொல்லும்..
வருடா வருடம்
கடைகள் எடுப்பர் ஏலம்..
மிளகாய் பஜ்ஜியும்
ஜிஞ்சர் டீயும்
ஓமப்பொடி முறுக்கும்
சுக்கு காஃபியும்
விற்கும் எந்த வியாபாரியும்
லாபம் பார்ப்பது நிச்சயம்...
சில நேரம்
சாரல்.. மழையாய் பெய்யும்..
நனைந்தும் இன்னும்
நனையச் சொல்லும்...
தேனருவியும் சிற்றருவியும்
மதியப் பொழுதையும்
மாலை நேரமாய் காட்டும்
மாலை நேரம்
இரவாய்த் தெரியும்...
மூலிகைக் காடுகள் வழி வரும்
ஆறு விழுந்து அருவி ஆகும்
அதில் குளிக்கும் யாவரும்
மீண்டும் மீண்டும்
குளிக்கக் காட்டுவர் பேரார்வம்..
குளித்து முடித்ததும்
சலவை செய்த ஆடையும்
முகத்தில் பாண்ட்ஸ் பவுடரும்
கூட்டிக் காட்டும் வசீகரம்...
பஸ் ஸ்டாண்டிலும்
பேருந்து பயணத்திலும்
வழக்கத்தை விடவும்
பார்வைகள் கூடும்.. குவியும்..
சித்திரசபை மனம் மயக்கும்
தெப்பத்தில் மனம் லயிக்கும்..
திருக் குற்றால நாதரும்
அன்னை பராசக்தியும்
தருவர் வேண்டிய வரம்...
பெயரை எழுதாமலும்
யாரெனச் சொல்லாமலும்
செல்வதற்கு இவன் ஒன்றும்
வள்ளுவன் இல்லையாம்...
அன்புடன் ஆர் சுந்தரராஜனாம்..
🌷🪷🌹😀👍