ஓம்புவார் இல்லெனில் சென்று படுமாம் உயிர் - பழமொழி நானூறு 359

நேரிசை வெண்பா

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தா ராகி – நினைத்திருந்(து)
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனில்
சென்று படுமாம் உயிர். 359

- பழமொழி நானூறு

பொருளுரை:

செய்கின்ற செய்கையின்கண் எல்லாம் மனத்தானும் வாயானும் மெய்யானும் மிகவும் அடங்கியவர்களாகி, ஆராய்ந்து ஒன்றையும் விரும்பாதவராய் உலகத்தைக் காவல் செய்கின்ற அமைச்சர்கள் இலராயின் உயிர்கள் இறந்தொழிதல் திண்ணம்!

கருத்து:

நல்ல அமைச்சர்களே உயிர்கள் வாழ்ந்திருத்தற்குக் காரணமாவர்.

விளக்கம்:

அமைச்சர்மாட்டு நிகழ்தல் சிறிதாயினும் அதனால் உலகிற்கு விளைதல் பெரிது ஆதலின், மனம், மொழி, மெய்களால் விரைந்து செய்தலின்றி அடக்கி ஆராய்ந்து செய்வர் என்பது; அன்றி மூன்றினையும் முற்ற அவித்த முனிவர்களைப் போன்று அடக்கி என்றலுமாம்;

செய்கை அனைத்தினும் என்றதற்கு செய்கையான் வேறு வேறு ஆகத் தோன்றும் பொருள்களின் உண்மையை அறிந்து மூன்றினையும் அடக்கினார் என்பதாகக் கொள்க; 'மாவிசும்பு வழங்கும் பெரியோர் போல' என்றார் பிறரும்; செயல்களில் பற்றின்றி இருத்தல் அமைச்சர்க்குக் கொள்க.

'ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனில் சென்று படுமாம் உயிர்' என்பது பழமொழி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-23, 6:57 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

மேலே