காதலும் மறைந்திடுமா காணல் நீராக பாகம் - 10

10. மாறாத நட்பு

இவன் எதற்கு இப்போது ஃபோன் பண்ணுகிறான் என்று யோசித்தபடி ஃபோன் ஐ எடுத்து காதுக்கு கொடுத்தார்.

"டேய் கோபால் உன் மகளைப் பாருடா"
என்று எடுத்த எடுப்பிலேயே நேராக விஷயத்திற்கு வந்தார் கமிஷனர் வினோத் குமார் மிஷ்ரா.

ஒரு கமிஷனரும் திலோவின் தந்தையும் வாடா, போடா என்று பேசிக் கொண்டதை பார்த்து யோசிக்க ஆரம்பித்து விட்டீர்கள், என்றால் ரொம்பவும் தலையைப் போட்டு உடைத்துக் கொள்ள வேண்டாம் நானே சொல்லி விடுகிறேன்.

திலோத்தமாவின் தந்தையும் கமிஷனரும் சிறு வயதில் இருந்தே ஒன்றாக படித்தவர்கள்.

வினோத் குமாரின் குடும்பம் வடக்கில் இருந்து பிழைப்பிற்காக வந்து சென்னையில் செட்டில் ஆனவர்கள்.

வந்த இடத்தில் ஓரளவுக்கு தாராளமாக கைகளில் பணம் புழங்க ஆரம்பித்ததும் இங்கேயே தங்கி விட்டார்கள்.

சிறு வயது முதல் இங்கேயே வளர்ந்ததால் தமிழ் சரளமாக பேசவும் படிக்கவும் வரும்.

டிகிரி படிப்பு முடிந்ததும் அவர் தன் போலீஸ் கனவை நிறைவேற்ற முயற்சி ஆரம்பிக்கவும், கோபாலகிருஷ்ணன் தன் தந்தையின் பிஸ்னஸ் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

வேறு வேறு துறையில் இருவரும் முன்னுக்கு வந்தாலும் இருவரின் மனமார்ந்த நட்பும் மேன்மேலும் வளர்ந்து வருகிறது.

ஓஹோ...... முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டு வேறு கதையடிக்க ஆரம்பித்து விட்டேன் இதே வேலையா போச்சு எனக்கு..... சாரி சாரி வாங்க கதைக்குள் போவோம்.....

ஹேய் வினோத், திலோ உன் கூடவா இருகிறாள். இங்க மாப்பிள்ளை திலோவை பற்றி என்னென்னவோ சொல்றார் ஒன்றும் புரியல வினோத்.

நீயாவது விவரமாக சொல்லு என்று மூச்சு விடாமல் படபடப்பாக கேட்டார் திலோவின் தந்தை.

ஓஹோ மாப்பிள்ளை ரகுராமன் அங்க வந்தாச்சா என்று கூறி ஒரு வினாடி நிறுத்தினார்,

கோபாலகிருஷ்ணன் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பவன், நான் சொல்லும் விஷயம் அவனைப் பாதிக்க கூடும் என்று மனதில் நினைத்து கொண்டார் கமிஷனர்.

எடுத்த எடுப்பில் விஷயத்தை போட்டு உடைக்க இருந்த தன் மதியின்மையை எண்ணி தானே தன் தலையில் மானசீகமாக கொட்டிக் கொண்டார்.

அதன் பிறகு மெதுவாக, இல்லை ஒன்றும் பெரிதாக இல்லை கோபால் நீ ஒன்னும் வொர்ரி பண்ணாத நான் திலோவையும் அழைச்சிட்டு அங்க வர்றேன்.

அங்க வந்து பேசிக்கலாம்....

இன்னும் பத்து நிமிடத்தில் நாங்க அங்க இருப்போம் சரியா என்றபடி ஃபோனை வைத்தார்.

உடனடியாக கிளம்பி ஆக்ஸிடென்ட் நடந்த இடத்தை வந்தடைந்தார்.

கமிஷனர் அந்த ஸ்பாட் க்கு வருவார் என்று எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர் கையில் புகைந்து கொண்டு இருந்த சிகரெட்டை தரையில் போட்டு காலால் தேய்த்து விட்டு கமிஷனரை நோக்கி ஓடி வந்து சல்யூட் அடித்தார்.

என்னய்யா பிரச்சினை, அந்தப் பொண்ணு எங்க என்றார். இன்ஸ்பெக்டர் சுருக்கமாக நடந்ததை விவரித்தார்.

கவனமாக அனைத்தையும் கேட்டுவிட்டு நெற்றியை தடவியபடி யோசித்தார்.

இருந்தும் திலோ ஏன் அந்தக் குழந்தையை ஹோமுக்கு அனுப்ப மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள் என்று புரியவில்லை.

சரி எங்க அந்த பொண்ணு என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தார். தொலைவில் குழந்தையை தூக்கியவாறு திலோத்தமா நின்றிருந்தாள்.

அவளை நோக்கி சென்று பார்த்தால், அங்கு பலநாட்கள் பட்டினி கிடந்ததைப் போல் இருந்த குழந்தைக்கு ஒரு கப் கேக்கை கையில் வைத்து ஊட்டிக்கு கொண்டு இருந்தாள்.

அந்தக் காட்சியை பார்த்து வியந்து போனார் கமிஷனர். திலோத்தமாவை சிறு வயதில் இருந்தே பார்த்து வருகிறார்.
அவரைப் பொருத்தவரை அவள் இன்னும் சிறு பெண் தான் ஆனால் இப்பொழுது பார்க்கும் போது அவள் நடவடிக்கையில் ஒரு முதிர்ச்சியை அவரால் உணர முடிந்தது.

மிகவும் பொறுப்புடன் குழந்தைக்கு அவள் ஊட்ட அந்தக் குழந்தையும் மிகவும் பழகிய தோரணையில் அவள் முகம் பார்த்து சிரித்தபடி சாப்பிட்டது.

அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார். அவர் பார்த்து கொண்டு இருக்கும் போதே கண்கள் செருகி குழந்தை மயக்கத்தில் ஆழ்ந்தது.




சந்திப்போம்......



கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (28-Jul-23, 4:38 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 56

மேலே