அறிமடமும் சான்றோர்க்கு அணி - பழமொழி நானூறு 361
நேரிசை வெண்பா
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை யளித்தாரைக் கேட்டறிதும் - சொல்லின்
நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
அறிமடமும் சான்றோர்க்(கு) அணி. 361
- பழமொழி நானூறு
பொருளுரை:
செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!
காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.
கருத்து:
அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.
விளக்கம்:
அறிமடம் - அறிந்தும் அறியாது போன்று இருத்தல்; முல்லைக்குத் தேரீந்தான் பாரி. மயிலுக்குப் போர்வையீந்தான் பேகன். இவர்கள் காட்டிற் படர்ந்த முல்லைக்கும், வாடையால் மெலிந்த மயிலுக்கும் வேறு பொருள்களைக் கொண்டு அவைகளின் இடரை நீக்க அறிவாராயினும், அறியாதவர்கள் போன்று உயர்வுடைய தம் பொருள்களைக் கொடுத்துச் சேறலின் அறிமடமாயிற்று.
அறியாதவர்கள் போன்று கொடுத்துச் சேறலின் அவர்கள் செயல்களால் புகழ் என்றும் நிலைபெற்று நிற்றலால், சான்றோர்க்கு அணி எனப்பட்டது.
நீடுநீர் – மிக்க நீரையுடைமையின் கடலுக்காயிற்று.
'அறிமடமும் சான்றோர்க்கு அணி' என்பது பழமொழி.