யார் அவன்
யார் அவன்?
வீட்டிலிருந்து கிளம்பியவன் அந்த பாதையில் எங்கு போவது என்று தெரியாத நிலையில் நடந்து கொண்டிருந்தேன். மனம் முழுக்க மனைவின் மீது கோபம், அவளின் ஆயுதமான வாய் தாக்குதலை ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு எதுவும் பேசாமல் கதவை திறந்து வெளியே வந்தவன் ஏதோ நினைவில் காம்பவுண்ட் கேட்டையும் திறந்து ரோட்டுக்கு வந்து விட்டேன்.
முதலில் காம்பவுண்டுக்குள்ளேயே என்னுடைய கோபத்தை காட்ட வீட்டை சுற்றி நாலு சுற்று வரலாம் என்று மனம் நினைக்கும் போதே அனிச்சையாக காம்பவுண்ட் கேட்டை திறந்து வெளியே வந்து விட்டேன்.
சரி திறந்து மூடிய காம்பவுண்ட் கதவை மீண்டும் திறக்க சோம்பல் பட்டு வாகனங்கள் சென்று வந்து, கொண்டிருந்த ரோட்டிலேயே வலது புறம் திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டேன். காலை பதினோரு மணி இருக்கலாம், வெயில் கொஞ்சம் கொஞ்சமாக தன் அழுத்தத்தை தலை மீது காட்டி கொண்டிருந்தது.
திடீரென என் தோள் மீது ஒரு கை விழுந்து அப்படியே அணைக்க திடுக்கிட்டு யார் என கழுத்தை திருப்ப முடியாமல் சிரமபபட்டு திருப்பி பார்த்தேன். முகம் சரியாக அடையாளம் காணமுடியவில்லை, காரணம் என் தோளோடு தோளாக நடந்து வந்தவன் என்னை விட உயரமாக இருந்தான்.
யார் இவன்? எதற்காக என் தோள் மீது கை போட்டு இவ்வளவு உரிமையாய் இறுக்கியபடி நடக்கிறான்? மனதுக்குள் சுள்ளென்று கோபம் கொந்தளிக்க, நடப்பதை நிறுத்தி அவனது கையை தோளில் இருந்து எடுக்க முயற்சித்தது மட்டுமில்லாமல் கோபமாய் ஹலோ யாரு மிஸ்டர் நீங்க? எதுக்காக என் தோள் மேல கை போடறீங்க?
என்னுடைய மிரட்டலுக்கெல்லாம் அவன் பயப்பட்டது போல் தெரியவில்லை, அப்படியே நடந்துகிட்டே இருங்க, நின்னீங்கன்னா பின்னால வர்றவங்க உங்களை கத்தியால முகுகுல குத்திடுவாங்க. உங்க முதுகு பின்னாடி கத்தியோட ஒரு ஆள் நடந்து வந்துகிட்டிருக்கான்.
அவன் சொன்னதை கேட்டதும் சட்டென மயிர்கூச்செரிந்தது, பின்னாடி ஒருவன் என் முதுகில் கத்தியால் குத்த வருகிறானா? பயத்துடன் தலையை திருப்பி அவனை பார்க்க முயற்சி செய்தேன். “தலையை திருப்பாதே” திருப்புனா அவன் குத்திடுவான். அதனால பேசாம என் கூடவே நடந்து கிட்டே வா, நான் சொல்ற வரைக்கும் நீ முரண்டு பிடிச்சு நிக்க கூடாது. புரியுதா?
அவன் சொன்னது எதுவும் புரியவில்லை. யாரிவன் எதற்கு என் மீது தோளில் கை போட்டு இப்படி ரோட்டில் நடக்க வேண்டும்?. எனக்கு யாராவது ஒட்டி நடந்தாலே பிடிக்காது, கொஞ்சம் தள்ளித்தான் நடக்க முயற்சிப்பேன். அது மனைவியாய் இருந்தாலும், பிள்ளைகளாய் இருந்தாலும். அப்படி இருக்கும்போது இவனின் நெருக்கமும் இறுக்கமும் மனசை இம்சைபடுத்தின. என்றாலும் இவன் யார்? யார் பின்னாலிருந்து என்னை குத்த வருபவன்? எதற்காக குத்த வருகிறான்? ஒன்றும் புரியாமல் வேண்டா வெறுப்பாக அவனுடன் ஒட்டியபடி நடந்து கொண்டிருக்கிறேன்.
திடீரென என்னை இடது புறமாக திருப்பி ஒரு சந்து போன்ற பாதையில் தோளில் கை போட்டு இழுத்த நிலையிலே நடத்தி சென்றான். என்னுடைய எதிர்ப்பை காட்ட வலு கட்டாயமாக நான் நிற்க முயற்சி செய்தேன். அது மட்டுமல்ல, அவனிடமிருந்து திமிறவும் முயற்சி செய்தேன்.
அவனை ஒட்டி வந்த ஆட்டோ ஒன்றை, கை நீட்டி அதனுள் என்னை தள்ளியவன் அப்படியே பின்னால் அவனும் ஏறி உட்காந்து வ. உ,சி போப்பா, ஆட்டோ வேகம் பிடிக்க இப்பொழுது என் குரலை உயர்த்தி அவனிடம் யாருய்யா நீ? எதுக்காக இப்படி என்னை இழுத்துட்டு போயிட்டிருக்கே, முதல்ல ஆட்டோவை நிறுத்த சொல்லு, இந்தாப்பா ஆட்டோ, வண்டியை நிறுத்து, இந்த ஆள் என்னை இழுத்துட்டு போறான், இவன் யாருண்ணே தெரியாது.
ஆட்டோ டிரைவருக்கு கேட்டிருக்கும் போல, சந்தேகமாய் திரும்பி பார்க்க, இவன் அண்ணே நீங்க போங்க, அவரு கோபிச்சுகிட்டு வந்துட்டாரு, அவரை வீட்டுக்கு கூப்பிட்டு போயிட்டிருக்கேன், சமாதானமாய் சொல்ல, டிரைவர் சந்தேகமாய் திரும்பி திரும்பி பார்த்து வண்டியை ஓட்டினார்.
சத்தம் போடாதீங்க, உங்க பின்னாடி பாருங்க, ஒரு கார்ல என்னை கொல்ல அருவாளோட வந்துகிட்டிருக்காங்க, அவங்க கிட்ட தப்பிக்கறதுக்காக உங்களை பிடிச்சுகிட்டு போயிட்டிருக்கேன். இப்ப ஆட்டோவை நிறுத்துனீங்கன்னா இங்கேயே அவங்க என்னை அறுவாள்ல வெட்டிட்டு போயிடுவாங்க, அது மட்டுமில்லை, என் கூட வந்துகிட்டிருந்ததுனால சாட்சி கூடாதுன்னு உங்களையும், ஏன் இந்த டிரைவரையும் கூட வெட்டிட்டு போயிடுவாங்க. புரிஞ்சுக்குங்க, அமைதியா வாங்க, நான் ஒரு இடத்துல இறங்கி அப்படியே போயிடறேன். நீங்க இதே ஆட்டோவுல அப்படியே உட்கார்ந்து வீட்டுக்கு போயிடுங்க.
அவன் சொல்ல சொல்ல எனக்கு பயத்தில் உடம்பு உதறலெடுத்தது. சினிமாவில் தான் பார்த்திருக்கிறேன், இந்த மாதிரி காட்சியெல்லாம், இப்ப அது எனக்கே நடக்குற மாதிரி இருக்கே, பயத்துடன் ஆட்டோவில் இருந்தபடியே மெல்ல தலையை திருப்பி பார்க்க, கார் ஒன்று நான் சென்ற ஆட்டோவை ஒட்டியபடி பின்னால் வந்து கொண்டிருந்தது. அதில் நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டிருந்ததும், அவர்கள் தோற்றம் கூட கரடு முரடாய் இருப்பது போல தெரிந்தது.
ஐயோ என்ன நடக்கப்போகிறதோ? மனம் பயத்தால் தடுமாறியபடி இருக்கும்போது சட்டென ஆட்டோவை நிறுத்த சொன்னான். டிரைவர் சட்டென வேகத்தை குறைத்து ஓரங்கட்ட முயற்சிப்பதற்குள் அவன் ஓட ஒட இறங்கியவன் தேங்க்ஸ், வர்றேன், ரோட்டை அப்படியும் இப்படியும் பார்த்து கடந்து ஏதோ ஒரு பக்கம் ஓடி மறைந்து போய்விட்டான்.
ஆட்டோ தடுமாறி மெல்ல ஓரங்கட்டி, “சரியான சாவு கிராக்கி” , இப்படி ட்ராபிக்குல இறங்கி பின்னாடி வர்றவன் கிட்ட எனக்கு பேச்சு வாங்கி கொடுக்கறான், திட்டிக் கொண்டே என்ன சார் இங்க இறங்கிக்கறீங்களா? யாரு அவன்? எதுக்கு அவன் கூட வந்தீங்க?
கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்திருக்க, எனக்கு எதுவுமே புரியாமல் டிரைவர் முகத்தை பார்த்து அவன் யாருண்ணே தெரியாது, நான் பாட்டுக்கு சும்மா நடந்து வந்துகிட்டிருந்தவன் தோள் மேல கையை போட்டு… நல்ல வேளை, அவர் முன்னால் அழுகை வரவில்லை. அதன் பின்தான் கவனித்தேன். ஆட்டோவின் பின்னால் காரில் வந்தவர்கள், நின்ற ஆட்டோவின் அருகில் நிறுத்தி ஆட்டோ டிரைவரை திட்டியபடியே கடந்து போனார்கள், “அறிவிருக்கா” நடு ரோட்டுல திடீருன்னு பிரேக் போட்டு நிறுத்துற, சிக்னல் காட்ட மாட்டியா? கார் தாண்டி பறந்து விட்டது.
அப்படியானால் அவர்கள் இவன் சொன்ன ஆட்கள் இல்லையா?
சரி சரி ஆட்டோவை திருப்பி வீடு எங்கேன்னு சொல்லுங்க? இறங்கி நடந்து போனா மறுபடி அவன் வந்து பிடிச்சுக்க போறான். வீடு வந்து இறங்கும்போது ஆட்டோ சார்ஜ் நூற்றி ஐம்பது ஆச்சு என்று சொன்னார். காம்பவுண்ட் கேட்டை திறந்து நிமிர்ந்து பார்க்க மனைவி வாசலில் நின்றபடி இருந்தாள்.
ஒரு நூத்தைம்பது ரூபாய் கொண்டு வந்து கொடுத்துடேன், அவள் முறைத்தபடி, பணம் எடுத்து கொடுக்க, உள்ளே சென்றாள். கூடவே சத்தமாய் முணு முணுத்தபடி “ஐயா கோபிச்சுகிட்டு ஆட்டோவுல ஊர் சுத்த போவாரு, அதுக்கும் தண்டம் நான் அழுகணும்”, எல்லாம் என் தலை எழுத்து.
கட்டிலில் போய் படுத்தவன், எதுவும் பேசவில்லை, எது சொன்னாலும் அவள் என்னை நம்ப போவதில்லை. கிடக்கிறாள், பேசாம காம்பவுண்டை சுத்தியிருக்கலாம். ம்.. நான் தப்பிச்சு வந்ததே பெரிசு.