என்னவள்

—————
என்னுடன் இணைந்து
பதினேழாண்டுகள் இருக்கும்..
சில சமயங்களில்
என் தோள்களில்..
சில சமயங்களில்
என் மடியில்..
வெகு நேரங்களில்
என் எதிரில்..
கருத்த மேனியெனினும்
கைப்பட்ட உடன்
முகம் மிளிரும்..
என் விரல்கள்
பட்டதும் அவளினுள்
அணுக்கள் நகரும்..
அவள் உடலிலும்
உஷ்ணம் கிளம்பும்..
தலை நிமிர்ந்தால்
தினம் ஒளிர்வாள்..
தலை குனிய
தன்னுள் அடங்கிடுவாள்..
இன்று இரவேனோ
எங்கள் இருவருக்கும்
நீல வண்ண
சிறு படுக்கை..
சுவரோரம் அவளை
அமரச் செய்து..
ஜன்னல் ஓரமென்றும்
நான் சொல்லலாம்..
சிறிய தலையணை
எனக்கு மட்டும்..
சிறிய போர்வையும்
எனக்கு மட்டும்..
ஆணாதிக்கமென்று கூட
நினைக்க தோன்றும்..
தொடுப்பேசியை ஊமையாக்கி
அவள் பையில்
இட்டு விட்டேன்..
சில்லென்ற காற்று
சன்னல் வழியே..
சிறு துர்நாற்றமும்
காற்றுடன் சேர
உறக்கம் வரவில்லை..
மல்லாந்து படுத்தாலும்
என் இடக்கை
அவள் மேலே..
ஒருகணித்து படுத்தாலும்
என் வலக்கையால்
அவளை அணைத்து..
சிறிது உறங்கியும்
உடன் விழித்தும்..
உறங்க நினைத்தாலும்
உறக்கமேனோ வரவில்லை..
அவளை அபகரிக்க
யாரும் துணிவாரென்ற
பயத்துடனே எனக்கு
அன்றிரவு அமைந்தது..
அவ்வப்போது கூக்குரல்கள்..
சிறுசிறு சண்டைகள்..
காதுகள் உணர்ந்தன..
இடையிடையே சிறு
உறக்கம் உடலயர்வால்..
சன்னல் வழி
வரும் காற்று
சற்று குறைய..
கீச்சென்ற ஒலி
கிவியை கிழிக்க
நான் இறங்கும்
ரயில் நிலையம்
வந்து சேர
தலையணை போர்வை
இரண்டையும் பையிலிட்டு
கருப்பு நிறத்திலுள்ள
என்னுடன் எப்போதும்
எங்கும் பயணிக்குமென்
பணியில் என்னவளான
மடிக்கணினியை எடுத்து
என் தோளிலேற்றி
ரயிலிலிருந்து இறங்கி
வீடு நோக்கி
உறக்கம் தொலைத்த
களைப்புடன் நடந்தேன்..
———-
சாம். சரவணன்

எழுதியவர் : சாம்.சரவணன் (25-Sep-23, 4:09 pm)
சேர்த்தது : Sam Saravanan
Tanglish : ennaval
பார்வை : 192

மேலே