திரைமறைவுக்காதல்

தேனீயாய் பிறந்திருந்தால் ரோஜாப்பூ மொட்டுன்னை
தேனிலவில் இதழ் முகர்ந்து மதுரம் குடித்திருப்பேன்
கேசத்தின் வாசம் மூக்கினுள் புகுந்து மதுவாய் மயக்க
கூந்தலோ இல்லை ஆம்பலோ என குழம்பிப்போனேன்
பக்கத்திலே சென்றால் பயப்படுகிறாள் பழிப்பர் என்று
சலசலவென்று சிரிக்கவும் சலனப்பட்டு தவிக்கிறாள்
திரைமறைவில் தினம்தினமும் தமிழ் கமழ பேசினாலும்
கருவிழிகள் முத்தமிட்டு காதல் மொழி பேசவில்லை
கற்பனையில் கை பிடித்து கடற்கரையில் நடந்தோம்
கடல் மணலில் வீடு கட்டி குழந்தைகளாய் வாழ்ந்தோம்
கைக்கெட்டும் தொலைவில் தேனீர் ஊற்று போல் காதலி
நெருங்கி வந்ததும் கானல் நீராய் மறைந்து போகிறாள்
அவளோடு ஐந்து நிமிடம் சிரித்து பேசி கதைத்து மகிழ
தரிசனம் மட்டும் தந்திடும் தேவி வரம் தர மறுக்கிறாள்
சுட்டு விரல் மோதிரம் கழற்றி கணையாழி இடுவேன்
காலத்தின் கதிர்கள் சூரியனாய் சுட்டெரித்தாலும்

எழுதியவர் : நிழல்தாசன் (18-May-24, 12:10 am)
சேர்த்தது : நிழல்தாசன்
பார்வை : 91

மேலே