அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ் - கவிஞர் இரா இரவி

அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்!

- கவிஞர் இரா. இரவி

*****

உயர்அறமன்றத்தில் உயர் தனிச்செம்மொழி வேண்டும்
வழக்கறிஞர்கள் மட்டுமே வாதாட உரிமை உண்டு

வாதி பிரதிவாதி வாதிட வழியே இல்லை
வழக்கறிஞர்கள் பேசுவது புரிய வேண்டாமா?

மக்கள் மொழியில் வாதாட தடை எதற்கு
மன்றாடி கேட்டு விட்டோம் மறுக்கின்றீர்?

உலகின் முதல்மொழி பெருமை பேசிவிட்டு
உரிய உரிமை வழங்கிட மறுப்பது ஏனோ?

புரியாத ஆங்கில மொழியில் பேசுவது
புரிவதே இல்லை தொடர்புடையவர்களுக்கு

சரியான நீதி கிடைக்க தமிழே வேண்டும்
சரியே தமிழில் வாதாடுவது சட்டமாக்குங்கள்

வழக்கறிஞர்கள் பலமுறை போராடி விட்டனர்
வழக்குமன்றம் செவி சாய்ப்பதே இல்லை

பிறமொழிக்கு உள்ள உரிமையை நம்
பைந்தமிழ் மொழிக்கு தருவதில் தடை ஏன்?

மாவட்ட நீதிமன்றங்களில் ஒலிக்கும் தமிழ்
மாபெரும் உயர்நீதிமன்றத்திலும் ஒலிக்க வேண்டும்

என்ன வளம் இல்லை எம் தமிழ்மொழியில்
என்ன குறை கண்டீர் எம் தமிழ்மொழியில்

சொற்களின் சொக்கத்தங்கம் தமிழ்மொழி
சொன்னால் புரியாதோ நீதிமான்களுக்கு

உயர்நீதிமன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்
உடனடியாக அதற்கான ஆணையை வெளியிடுங்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி. (30-Jul-24, 2:11 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 39

மேலே