ஒரு கருப்பு இரவு!
தொட்டுக் கொண்டு அருகருகே இரு குடிசைகள்
ஒன்றில் தனிக் குடித்தனம் என்ற பெயரில்
ஒரு குடிகாரக் கணவனும், கைக்குழந்தை மனைவியும்
மற்றொன்றில் ஒரு கிழவியும் கிழவனும்
வீழ்ந்து, வாழ்ந்து கொண்டு வந்தார்கள்
தொட்டுக் கொள்ளா அண்டை வீட்டுக்காரர்களாக!
எப்போதாவது தாத்தா கொஞ்சிப் போவார் குழந்தையை
சொட்டுச் சொட்டாய் அந்த இளம் மனைவி
சிந்தும் கண்ணீர் கிழவியிடம் சொல்லாமல் சொல்லும்
அவளது வறுமையையும் வாழ்க்கை நிலையையும்!
எப்படிப்பட்டவனுக்கு என்ன அழகாய் ஒரு பிள்ளை பார்
என்ற புலம்பல்கள் அவனுக்கும் கேட்கும் அவ்வபோது...
என்றும் போல் அன்றிரவு தொட்டிலில்
ஐந்து கிலோ பட்டாம்பூச்சி உறங்க
அடி வாங்கிக் கொண்டும் அவனுக்கு
அரிசிக் கஞ்சியை பரிமாறிவிட்டு
நடக்க இருக்கும் விபரீதம் தெரியாமல்
உறங்கப் போனாள் அக்மார்க் இல்லத்தரசி...
மின்சாரம் பொய்ப்பது என்பது அவ்வூர்க்கு புதிதல்ல
இருட்டில் பூச்சி போட்டு அண்டக்கூடும் என்பதால்
மண்ணெண்ணெய் விளக்குகள் எரியவிட்டு உறங்குவதுண்டு
இருந்த போதையில், எதை தட்டி விட்டோம் என்பதறியாமல்
இன்னும் உறக்கத்தில் குடும்பத் தலைவன்...
தொடங்கியது வேடிக்கை என்று கூச்சலிட்டன பூச்சிகள்...
என்ன நடக்கின்றது என்பதை அவள் யூகிக்குமுன்
எரிந்து விட்டது பாதிக் குடிசை எந்தச் சத்தமும் இல்லாமல்
கிழவன் கிழவி குடிசையும் நெருப்புடன் நட்பு கொள்ள
இப்போதுதான் குழந்தை அழும் சத்தம் கேட்டது கிழவிக்கு...
கிழவனின் இருமல், இளம்பெண்ணின் கதறலோடு
நீண்டு கொண்டிருந்தது அந்தக் கருப்பு இரவு...
சூரியன் வேண்டா வெறுப்போடு விடிய
விடிய விடிய நடந்த கச்சேரிக்கு சம்பந்தமில்லா சாட்சியாக
ஊரார் ரெட்டை குடிசை முன்பு செயற்கை கண்ணீரோடு ஆஜர்.
பத்த வெச்சவன வுட்டுட்டு, பச்சைப் புள்ளையையும்
கிழவியையும் கொன்னுட்டான் பார்...என்ன கடவுளோ?
என்று ஊரார் புலம்பியபோதுதான் நடந்தது விளங்கிற்று!
நெஞ்சை அடைத்தது தாயின் கதறல்...
அசையாமல் அமர்ந்திருந்தார் தாத்தா.
அரைகுறையாய் எரிந்து ஆஸ்பிடலில் அந்தப்பாவி!
குடிசையின் தொட்டில் சாரம் அருகி
கட்டை விழுந்ததால் அசைய முடியாமல்
குழந்தையை அணைத்தபடி
கருகிப் போயிருந்தாள் கிழவி!