மலரே ஒரு வரம் வேண்டும்--- ரஞ்சிதாவின் கருத்துக் கவிதை
விரிந்த மலரிடம்
விசாரித்தேன்
வாழ்க்கை என்றால் என்ன ?
ஒரு நாளில் எல்லோர்க்கும்
ஒளி வீசும் புன்னகை காட்டி
தும்பிக்கு தேன் கொடுத்து
துடியிடையாளின் கூந்தலிலோ
தூங்கா இறை சிலையிலோ
தூரிகையாய் தூங்கி முடித்துக் கொள்வது வாழ்க்கை என்றது
வாயடைத்து நின்றேன்
வாய் பேசாத பூ வாழ்க்கை கண்டேன்
எத்தனை இனிமை இதனிடம் ?
மனிதனை மட்டுமல்ல
கடவுளையும் மணக்க வைக்கும்
மலரே உன் வாழ்க்கை எனக்கு வேண்டும் - வரம் கொடு என்றேன்
----ரஞ்சிதா
கவிக்குறிப்பு : எனது "வாழ்க்கை என்பது " என்ற
கவிதைக்கு கவித் தோழி ரஞ்சிதா எழுதிய
கருத்துக் கவிதை என் மனதை தொட்ட கவிதை.
கருத்தும் உவமையும் அருமை. உணர்வுகளை
தெரிவிப்பதில் பெண்கள் தனித்தும் சிறந்தும்
நிற்கிறார்கள். உங்கள் பார்வைக்காக
இங்கே வெளியிட்டிருக்கிறேன் கருத்துக்களையும்
பாராட்டுதலையும் ரஞ்சிதாவிடம் தெரிவிக்கவும்
இது அவர் எழுதிய மணக்கும் கவிதை
--அன்புடன்,கவின் சாரலன்