ஒற்றை எறும்பு !

படுக்கை விரிப்பில்
ஒற்றை எறும்பு
ஊர்ந்து திரிந்தது!

புற்றுக்குப் போகிற
வழி மறந்ததாலோ
உற்றார் உறவினர்
விலக்கி வைத்ததாலோ
அன்றி
உணவு தேடும் உந்துதலாலோ
திக்குத் தெரியாமல்
அலைந்து கிடந்தது !

மழைத்துளிகள் கிளப்பிவிடும்
மண்ணின் சூட்டைப் போல்
மனசுக்குள் இருந்து ஒரு பயம் :
"தூங்கும்போது
காதுக்குள் நுழைந்துவிட்டால் ...?"

மெல்ல எடுத்து
உள்ளங்கையில் வைத்து
சுவரின் ஓரமாய்
விட்டு விட்டு வந்தேன்
எறும்பு போய் விட்டது !

இருந்தாலும்
கனவில் வரலாம் !

எழுதியவர் : முத்து நாடன் (20-Feb-12, 7:20 pm)
பார்வை : 281

மேலே