யார் கள்வன்?... சின்ன கதை...

ஒரு முறை திருக்கைலாயத்தில் பார்வதி தேவியும் பரமேஸ்வரனும் பேசிக் கொண்டிருக்கையில் பார்வதி தேவியார் ஐயனை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார்.

'சுவாமி. காசி என்னும் புனிதத் தலத்தைப் பற்றி மிகப் பெருமையாக நீங்களும் அடியார்களும் பேசிக் கேட்டிருக்கிறேன். எவராயினும் ஒரு முறை காசிக்குச் சென்று கங்கை நதியில் நீராடி தங்களை விசுவநாதராகத் தரிசித்தால் அளவிட முடியாத புண்ணியங்கள் பெற்று கைலையை அடைந்து இங்கேயே நிரந்தரமாக இருக்கும் பேறு பெறுவார்கள் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா?'

'தேவி. நீ சொல்வதெல்லாம் உண்மையே. ஆனால் காசிக்குச் செல்லும் எல்லோரும் அந்தப் புண்ணியங்களை அடைவதில்லை. காசிக்குச் செல்லுதல், என்னை வழிபடுதல் போன்ற செயல்கள் மட்டுமே போதுமானவை இல்லை. என்ன சொல்கிறேன் என்பது தெளிவாகப் புரிய வேண்டுமானால் நாம் உடனே காசிக்குச் சென்று ஒரு நாடகத்தை நடத்துவோம். அதிலேயே புரியும்'.

ஐயனும் அம்மையும் காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் முன்பு ஒரு வயது முதிர்ந்த கிழத்தம்பதிகளாகத் தோன்றினார்கள். ஐயன் அம்மையின் மடியில் தலையை வைத்துக் கொண்டு மரண வலியில் துடிப்பதைப் போல் முனகத் தொடங்கினார். கிழவியோ செய்வதறியாது அந்த வழியே செல்பவர்களை எல்லாம் உதவிக்கு அழைத்துப் புலம்பிக் கொண்டிருக்கிறாள். அந்த வழியே கோவிலுக்குள் சென்ற ஒவ்வொரு பக்தரிடமும் 'பெருமானின் அடியார்களே. இங்கு பாருங்கள் என் கணவர் படும் பாட்டை. அவர் கடும் தாகத்தில் இருக்கிறார். எந்த நேரமும் அவர் உயிர் பிரிந்து விடும் போல் இருக்கிறது. யாராவது அவருக்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நான் அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டுச் செல்ல முடியாது. யாராவது அவருக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்' என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

பலரும் புனித கங்கையில் நீராடிவிட்டு கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்ய கைகளில் சிறிய கிண்ணங்களில் கங்கை நீரை ஏந்திக் கொண்டு சென்றனர். அவர்கள் பாட்டி படும் பாட்டினைப் பார்த்தனர்; அவள் புலம்பல்களைக் கேட்டனர். சிலர் 'அம்மா. கொஞ்சம் பொறுத்துக் கொள். நாங்கள் காசி விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு இந்தத் தீர்த்தத்தால் அவரை திருமுழுக்காட்டிவிட்டுப் பின்னர் வந்து உன் கணவரைக் கவனித்துக் கொள்கிறோம்' என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். சிலர் 'ஓ இது என்ன தொல்லை. இந்தப் பிச்சைக்காரர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. நிம்மதியாக இறைவனை வணங்க முடிகிறதா?' என்றார்கள். அதற்குப் பதிலாக சிலர் 'பிச்சைக்காரர்கள் இங்கே அமர்வதை அனுமதிக்கக் கூடாது.' என்று சொல்லிச் சென்றனர். பலர் இதனை எல்லாம் பார்க்கக் கூட இல்லை. அவர்கள் பக்திப் பரவசத்துடன் ஐயனைக் காண நேரே கோவிலுக்குள் சென்று கொண்டிருந்தனர்.

இந்த மக்கள் கூட்டத்தில் ஒரு திருடனும் இருந்தான். அவன் அந்த அம்மையின் அழுகுரலைக் கேட்டான். மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் தான் அவன் தன் கைவரிசைக் காண்பிப்பது. என்றும் போல் இன்றும் கோவிலில் அதிக கூட்டம் இருந்ததால் தனக்குச் சரியான வேட்டை என்று தான் எண்ணியிருந்தான். ஆனால் அம்மையின் அழுகுரலையும் தாத்தாவின் வலிமுனகலையும் கண்டு அவன் மனம் பொறுக்கவில்லை. அவன் நேரே பாட்டியிடம் சென்று 'அம்மா. நீங்கள் யார்? ஏன் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள்? அவருக்கு என்ன?' என்று வினவினான். பாட்டியும் 'மகனே. நாங்கள் காசி விஸ்வேஷ்வரரைத் தரிசிக்க வந்தோம். என் கணவர் திடீரென்று உடல் நலம் குறைந்து மயங்கி விழுந்துவிட்டார். யாராவது அவர் தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்தால் அவர் உயிர் பிழைப்பார். அவரை இந்த நிலையில் தனியே விட்டுவிட்டு என்னால் போய் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. நான் எத்தனையோ பேரைக் கேட்டுவிட்டேன். அவர்களில் பலர் தண்ணீர் செம்பினை கைகளில் வைத்திருந்தும் யாருமே தரவில்லை' என்று சொன்னாள்.

அவர்கள் படும் கஷ்டத்தைக் கண்டு கள்வனின் மனம் பொறுக்கவில்லை. உடனே கங்கைக்குச் சென்று கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு வந்தான். பாட்டி அவனைத் தடுத்து 'மகனே. என் கணவர் எப்போதும் உண்மையே பேசி உண்மையாகவே நடந்து கொண்டவர்கள் கைகளால் தான் தண்ணீர் அருந்துவார். நீ எப்போதும் உண்மையே பேசினாயா? சொல்' என்று கேட்டாள். திருடனும் ஒரு நொடி தயங்கிவிட்டு 'அம்மா. நான் நல்லவனில்லை. இது வரை நான் அறிந்து ஒரு நல்ல செயலும் செய்ததில்லை. பலரின் பணத்தைத் திருடி அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்தியிருக்கிறேன்' என்று உண்மையைக் கூறி தலைகுனிந்து நின்றான். பாட்டி அவனிடம் 'இத்தனை நாள் நீ எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது உண்மையைச் சொன்னதால் என் கணவருக்குத் தண்ணீர் தரலாம்' என்று சொன்னாள். அதனைக் கேட்டவுடன் அந்தத் திருடனும் மிக்க மகிழ்ச்சியுடன் கிழவனாருக்குத் தண்ணீரைக் கொடுத்தான்.

ஒரு மடக்கு அந்த நீரை தாத்தா குடித்த உடனேயே அந்தக் கிழத் தம்பதியினர் மறைந்து அங்கே ஐயனும் அம்மையும் தோன்றினர். ஐயன் திருடனைப் பார்த்து 'மகனே. நீயே சிறந்தவன். உண்மையைப் பேசுவதை விட மிகச் சிறந்தது ஒன்றும் இல்லை. மக்களுக்குச் சேவை செய்வதை விட சிறந்த வழிபாடு ஒன்றும் இல்லை. நீ இன்று செய்த இந்த நற்செயலால் இதுவரை செய்த அனைத்து தீய செயல்களுக்கும் பரிகாரம் தேடிவிட்டாய்' என்றார்.



செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (4-Mar-12, 4:47 pm)
பார்வை : 698

மேலே