இந்தியா என் தாய்த்திரு நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!

வாள்பிடித்த மரபுயென்று
-------வக்கணையாய்ப் பேசிவிட்டு
வால்பிடித்து வாழுகின்ற
--------வகையான தத்துவத்தை
நூல்வடித்து வைத்திருக்கும்
--------நாணமே சிறிதுமில்லா
சீழ்பிடித்த பிணங்களவர்
--------சூழ்ந்திருக்கும் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



சூடு சொரணையெலாம்
---------சோற்றுக்கு விற்றுவிட்டு
கூடு தனைவளர்க்க
----------கூனிக் குறுகிநிற்பார்!
நாடு எரிகையிலும்
----------நெஞ்சில் பதற்றமின்றி
வீடு காத்திருக்கும்
----------வீரமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



தாகம் என்றொருவாய்த்
--------தண்ணீர்க் கேட்டழுவார்
தேகம் துடிப்பதனைத்
--------தள்ளிநின்று பார்த்துவிட்டுப்
போகுமுயிர் போனபின்னே
--------பிணத்தை வலம்வந்தே
நீர்க்குடம் உடைக்கும்;ஈர
--------நெஞ்சமுளோர் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



ஈழம் இடுகாடாய்
-------இனத்தின் சுடுகாடாய்
ஓலம் மிகுத்தாலும்
--------ஒக்கக் குரலெழுப்பி
காலம் கடத்துகின்ற
---------கண்கட்டு வித்தைகளின்
ஜாலம் காட்டுகின்ற
---------அரசதனைக் கேளார்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!




தட்டிக் கேட்பதற்கும்
--------தலைபோகும் என்றிடுவார்!
எட்டி உதைப்பதற்கும்
---------எடுப்பர் காலென்பார்!
முட்டிக்கொண் டழுவதற்கும்
---------மனதில் திடமின்றிப்
பெட்டிப்பாம் பாய்க்கிடக்கும்
---------பேடிகளின் நாடு!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!




தகப்பன் தலையிங்கே
---------தவிக்கும் உடலெங்கோ!
இடுப்பில் இதையறியா
---------இளம்பிள்ளை அழுகிறது!
ஒப்பாரி வைப்பாளோ
---------தாலாட்டுப் படிப்பாளோ
அப்"பாவி" மகள்கதை
---------ஐயா! நமக்கெதற்கு?
துப்புகெட்ட மக்காள்!நீர்
----------தூங்கிக் கொண்டிருங்கள்!

இந்தியா என் தாய்த்திரு நாடு-இல்லை
இதைவிட எனக்கொரு வெட்கக் கேடு!



-------ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (19-Mar-12, 12:42 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 320

மேலே