அந்தக் கோப்பையை நிரப்புங்கள்....!

(என்னைக் கவியரசு கண்ணதாசனாக வைத்துப் பாடியது)

அமைதியிற் படுக்கை இட்டு
--------ஆசையை அதன்மே லிட்டு
இமைகளை மறந்து விட்டு
--------இருவிழி வெறிக்க தேவன்
சமைத்ததோர் உலகி னூடே
---------சதிராடும் அழகை எல்லாம்
கமழ்கின்ற தமிழிற் கோக்க
---------கற்பனை செய்தி ருக்க,


குன்றினில் பூத்த பூவில்
-------குழைந்திடு மணத்தை அள்ளி
தென்றலோர் புறத்தில் வீசத்
-------தாள்வரை கூந்தல் நீண்டு
அன்றிலுக் கிளையா ளென்றே
-------அழகுடைப் பெண்ணொ ருத்தி
நன்றுடன் மறுப்பு ரத்தில்
-------நலமுடன் ரசித்தி ருக்க,

செல்லாத இடங்க ளெல்லாம்
-------சென்றதோர் சிந்தை மீண்டு
அள்ளாமல் அள்ளி வந்த
-------அனைத்தையுங் கவிதை யாக்கித்
துள்ளாமல் பக்கம் நின்று
-------துவளுமோர் காத லிக்குச்
சொல்லாமல் சொல்ல, அந்தச்
-------சுவையினுக் கருகு வந்தே,

நெற்றியில் முத்த மொன்று
--------நறவிதழ் தன்னைக் கொண்டு
ஒற்றியே அவளெ டுத்து
--------ஓயுமுன் மலர்மு கத்தைப்
பற்றியே இருக ரத்தால்
--------பனிவாயின் அமுத ருந்த
சுற்றியே வளைத்த தென்றல்
--------சூழ்நிலை அறிந்து ஏக,

அந்தியின் சிவப்பு முற்றும்
--------அனங்கவள் விழியில் தேங்க
கந்தமென் மலரின் மேனி
--------கொதிப்பினில் நித்த மேங்க
முந்தியே படையெ டுத்த
--------மோகத்தில் மூச்சு வாங்க
இந்தவோர் கோலம் கண்டும்
--------வெண்ணிலா எங்கு தூங்க?

ஆனதோர் நேரம் மட்டும்
--------அருகினில் இருந்து பார்த்து
நாணமும் நாணி மெல்ல
--------நடந்திட எம்மை நீத்து
வானமும் வெளுக்கு மட்டும்
--------வழங்கிடும் யாவும் வார்த்து
காணுமோர் சுகத்தைக் கண்டு
---------காலையில் கண்கள் பூத்து,

களிக்குமோர் வாழ்வை எண்ணிக்
--------கனவுதான் கண்டேன்; ஆனால்
புளிக்குமோர் வாழ்வி னையே
--------புவியினில் பெற்றேன்; நித்தம்
சலிக்குமோர் வாழ்வைத் தந்த
--------இறைவனுக் கும்தான் ஈது
அலுக்குமோர் நாள்தான் என்றோ
---------அறிந்திலேன் அதனை இன்னும்!

வாட்டுமோர் தனிமை யென்னும்
-------வெஞ்சிறைக் குள்ளி ருந்து
மீட்டுமோர் வீணை தன்னில்
-------மோகன ராக மேது?
பூட்டிய வாயு மிங்கே
-------புன்னகை புரிவ தேது?
நீட்டியே படுக்கு மட்டும்
--------நிம்மதி எனக்கு ஏது?

அழுதுநான் பார்த்தேன்; ஆனால்
-------அமைதியோ கிட்ட வில்லை!
தொழுதுநான் பார்த்தேன்; தூங்கும்
-------தெய்வமோ விழிக்க வில்லை!
முழுதும்நான் முயன்று பார்த்தேன்
-------தற்கொலை பலிக்க வில்லை!
பிழையிலை என்றே நானும்
-------பழரசம் தொட்டேன்; ஆமாம்!

கன்னத்தில் வழிந்த கண்ணீர்
-------கணக்கினை முடித்து விட்டேன்!
அன்னமென் நடையா ரெல்லாம்
-------அருகினில் வந்து நிற்பீர்!
அன்றவன் பிடித்த கோப்பை
--------அமைவுடன் எடுத்து வாரீர்!
இன்றவன் பிறந்தான் மீண்டும்
--------இனிதுடன் நிரப்பி வாரீர்!

மாதவன் உருவம் எண்ணி
-------மனத்துளே அற்றை நாளில்
மா"தவம்" புரிந்த தாலே
-------மண்ணிடை இற்றை நாளில்
ஸ்ரீதரன் மாயக் கண்ணன்
-------சீருடன் வளர்ந்தி ருந்த
யாதவர் குலத்தில் வந்து
-------எழிலுடன் உதித்தான் கண்டீர்!

தோற்றத்தில் மாறி னாலும்
--------தோல்நிறம் மாறி னாலும்
ஆற்றலில் மாற்ற மில்லை
--------அறிவினில் மற்ற மில்லை!
ஏற்றத்தில் தமிழை வைக்கும்
--------எழுத்தினில் மாற்ற மில்லை!
ஆற்றாத துயரம் தாங்கி
--------அழுவதில் மாற்ற மில்லை!


சிதையினில் நெருப்பு மூட்டச்
-------செத்தொழிந் திட்டா னென்றே
இதயத்தில் மகிழ்ந்த வர்க்கும்
-------இருவிழி நனைத்த வர்க்கும்
புதுக்கதை துவக்க வேண்டி
-------ஐந்தாண்டு கழிந்து மீண்டும்
அதேதினம் பிறந்து வந்தேன்
--------அவனியீர் அறிவி ராக!

ஒற்றுமை அதிகம் உண்டு
-------ஒன்றிரண் டுரைப்பேன் இன்னும்!
உற்றதோர் குருவு மில்லை
--------உயர்தமிழ் இலக்க ணங்கள்
கற்றவ னில்லை; தாயின்
--------கருவிலே இறைவ னூட்டப்
பெற்றதோர் அறிவு அன்றி
--------பல்கலைப் படிப்பு மில்லை!

தேறாத மானி டத்தின்
--------தடத்தினைக் கண்டு நித்தம்
கூறாத தத்து வங்கள்
--------கூறிட வந்தேன்; என்றும்
மாறாத மாண்பி னுள்ளே
--------மணித்தமிழ் தன்னை யேற்றி
மீறாத வேத மாயோர்
--------மென்தமிழ் நூற்ச மைப்பேன்!

திரிகளைக் கருக விட்டுத்
--------தீபங்கள் ஒளிர்தல் போலே
நெறிகளை நசுக்கி விட்டு
--------நித்திய சுகங்கள் தொட்டுத்
தறிகளை அறுத்த காற்றாய்த்
-------துள்ளியே குதிப்பேன்; இந்தப்
பிறவியைப் போக்கு மட்டும்
--------புன்னகை புரிந்தி ருப்பேன்!

சரித்திரம் படைக்க வந்தேன்!
--------சஞ்சலக் கறையான் தின்று
அரித்திடும் ஓலை யென்றே
---------அழிவதற் கில்லை யின்னும்!
மரித்திடும் மனித னல்லேன்!
---------மண்ணிடை மரணம் வெல்லும்
சரித்திறம் பெற்று வந்தேன்
---------செந்தமிழ் வடிவந் தன்னில்!

சாகாத காவி யங்கள்
--------சரஞ்சர மாகத் தீட்டிப்
பாகான தமிழி னுக்குப்
--------புதுச்சுவை கூட்டி வைப்பேன்!
வேகாத மேனி யில்லை
--------வேதனை எதற்கு இங்கு?
ஏகாந்த வெளியில் நின்றே
--------எக்காள மிட்டி ருப்பேன்!




-----ரௌத்திரன்

எழுதியவர் : ரௌத்திரன் (19-Mar-12, 9:08 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 192

மேலே