உன் இறந்த காலம் காட்டுதம்மா!

எனை காக்க ..வந்த தாயா நீ !
என் வாழ்வில் சுருதி சேர்க்க வந்தவளா!
மகளா இல்லை என் கண் இமைகளா !..
என்றெண்ணி வாழ்ந்திருந்தேன்!..

என் தாலாட்டு பிடிக்கலையோ!..
கண்ணே நீ ஒப்பாரி கேட்டதென்ன?..
மலர் சூடிவிட மறந்தேனோ ...கண்மணியே...
பூமாலை...கேட்டதென்ன?..

நீ இருந்த இடம் பார்த்து..
கண்கள் தான் அலையுதம்மா!..
அள்ளி அணைத்த ..என் கைகள்...
கண்ணே நீ தூங்கிய இடம்...தடவுதம்மா!..

நீ தூங்கிய இடத்தினிலே...
உன் ஆசை பொம்மை..தூங்குதம்மா! ...
கண்ணே நீ..
மின்னலாய் வெட்டுவியோ !..
இல்லை...நட்சத்திரமாய் மின்னுவியோ!...
காணுகின்ற காட்சி எல்லாம் ..
கண்ணம்மா...உன்னையே...காட்டுதம்மா...!

நீ இல்லா.. இந்த உலகினிலே.
நான் இருந்தென்ன பயன் இப்போ!..
இருக்கும் இடம் சொல்லி விட்டால்..
விழுந்தோடி வந்துடுவேன்!

கண்ணே நீ வாராயோ!
ஆசை முத்தம் தாராயோ!
விடை தெரியா கேள்விக்கு..
பதில் ..தேடி அலைகின்றேன்..!

கண்ணே நீ போன பாதை பார்த்து..
விழி மூடா நிற்கின்றேன்!..
நீ இருந்த காலம்..
என் வாழ்வின் வசந்த காலம் காட்டியதம்மா!
நீ இல்லா வரும் காலம் ..
உன் இறந்த காலம் காட்டுதம்மா!

எழுதியவர் : அனாமிகா (3-Aug-12, 10:27 am)
சேர்த்தது : anamika
பார்வை : 264

மேலே