தாயம்.
கடவுள்....
"விதி"ப் புள்ளிகள் பதித்த
தாயக்கட்டையை உருட்டிய போது...
உறைந்த சதுரங்களால்
நிரம்பி இருந்த பூமியில்...
நானும் நகர்த்தப்பட்டேன்...
விழும் எண்களின் எண்ணிக்கைக்கேற்ப.
ஆட்டத்தில்-
என்னைக் காப்பாற்றிக் கொள்ளவும்...
எதிரிகளை வெட்டித் தீர்க்கவும்
கற்றுக் கொடுக்கப்பட்டது எனக்கு.
மலை சேருதலும்...
பழமாகுதலும்....
கடவுளின் காலடி நோக்கிய பயணமாய்
சொல்லப்பட்டது...எனக்கு.
பிறப்பதற்கும்....
வெட்டுப்பட்டாலும் மீண்டும் பிறப்பதற்கும்
தாயத்திற்காகக் காத்திருக்கப்
பணிக்கப்பட்டது எனக்கு.
என்னை உருட்டி விளையாடும்...
இந்தக் கடவுளுக்கு...
என் காயங்களின்
வலி தெரிவதே இல்லையே...
என்னும் பெரும் மனக்குறையுடன்
காயங்களுடன் வாழ்ந்தபடி...
கடவுள் உருட்டும் தாயத்தில் துவங்கி
பழமாகும் மலை நோக்கிப் பயணிக்கிறேன்
என்னை நகர்த்தும் எண்களின்...
எண்ணிக்கையைப் பிரார்த்தித்தபடி.