சக்தி தந்தாள் !

தேனைகுழைத்தவள் தின்னுஎன்றாள் - எனைத்
தேடிமது உண்ணு பூவிதென்றாள்
வானில் குழைத்து நல் வண்ணமிட்டாள் - இந்த
வாழ்வில் களித்திட எண்ண மிட்டாள்
நானிக்கவி செய்தேன் என்றெழுதி - இவன்
நாளும் புழுகிடும் வேளையெல்லாம்
வானிற் கிடந்து சிரித்திடுவாள் - அவள்
வாழ்த்தித் தமிழ்செய்து வண்ணமிட்டேன்

மானைத் துள்ளு என மாயமிட்டாள் - அந்த
மாலைக் கிறக்கத்தில் மையலிட்டாள்
வானின் கிழக்கிடை செம்மையிட்டாள் - காலை
வந்து உதித்திட வெய்யில் செய்தாள்
ஊனைப் படைத்தென்னில் வாழ்வளித்தாள் - இந்த
உள்ளமதில் தமிழ் ஊற விட்டாள்
ஏனோ எனைக் கவி சொல்லவிட்டாள் - தமிழ்
ஓடும் உதிரத்தில் தூவி விட்டாள்

நானெனும் போதினில் நானுமில்லை - ஒரு
நல்ல கவிசொல்ல ஞானமில்லை
தேனும் வழிக்கின்ற பூவிதழின் - வாசம்
தென்றல் கொள்ளுமது சொந்தமில்லை
வீணில் வீம்பு கொள்ளும் நெஞ்சமில்லை - இவன்
வேண்டி அழுதிடும் தெய்வம் தன்னை
காணில் உயிர்தன்னை காலில் வைத்து - நானும்
காணும் ஒளியுடன் கூடிடுவேன்

எழுதியவர் : கிரிகாசன் (22-Sep-12, 5:08 am)
பார்வை : 108

மேலே